யாழ். பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர்கள் ஜனாதிபதிக்கு மகஜர்!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர் நியமனத்தினை மீள வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ். அரச அதிபர் ஊடாக மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர்கள் ஒன்றுகூடி ஜனாதிபதிக்கான மகஜரை இன்று (புதன்கிழமை) அரச அதிபரிடம் கையளித்தனர்.

குறித்த மகஜரில், “நாடு முழுவதும் பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர் விண்ணப்பங்கள் கோரப்பட்டு பிரதமரின் அலரி மாளிகையில் ஆனி மற்றும் ஆவணி மாதங்களில் இரண்டு நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்று கடந்த ஆண்டு புரட்டாதி 16ஆம் திகதி அகில இலங்கை ரீதியாக பயிலுநர் செயற்திட்ட உதவியாளர் நியமனத்திற்கு 6 ஆயிரத்து 547 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரிகளினது பெயர்ப் பட்டியல் நாடு முழுவதிலுமுள்ள மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன் நிமித்தம் அனைவரும் தமது மாவட்டச் செயலகங்களுக்குச் சென்று வரவு இடாப்பில் கையொப்பமிட்டு வந்தோம்.

மாவட்ட செயலகங்களினால் அவரவரது பிரதேச செயலகங்களுக்கு சில நியமனதாரிகள் கடமையை பொறுப்பேற்குமாறு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு நியமனதாரிகள் கையொப்பமிட்டு கடமைகளைப் பொறுப்பேற்றிருந்த நிலையில் கடந்த புரட்டாதி 18ஆம் திகதியன்று ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டிருப்பதனால் 23ஆம் திகதியன்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் தற்காலிகமாக இந்நியமனங்கள் இடைநிறுத்தப்படுவதாக அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் தொலைநகல் ஊடாக சுற்று நிரூபம் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் புரட்டாதி 18ஆம் திகதி தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியாகவும் நியமனம் வழங்கப்பட்ட திகதி அதேமாதம் 16ஆம் திகதியாகவும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்த பின்னர் கார்த்திகை 18ஆம் திகதியன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட எங்களது பணிகளை மீள தொடர்வதற்கு எங்களது மாவட்ட செயலகத்திற்குச் சென்றிருந்தோம்.

இருப்பினும், குறித்த அமைச்சினால் இந்நியமனம் பற்றிய ஒரு தகவலும் வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டது. பின்னர் இந்நியமனத்தை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்வதாக நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இதனால் 6 ஆயிரத்து 547 பேரின் வாழ்க்கை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது. சுமார் 8 மாதங்களாக வேலையின்றி எமது வாழ்வாதாரத்தை இழந்து நடுவீதியில் நிற்கின்றோம்.

இந்நிலையில், தகுந்த தீர்வினை பெற்றுத்தரும் வகையில் ஆவன செய்யுமாறு அகில இலங்கை பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர்கள் சார்பில் வேண்டி நிற்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த மகஜரைப் பெற்றுக்கொண்ட யாழ். அரசாங்க அதிபர் இதனை உரிய முறையில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதாக செயற்றிட்ட உதவியாளர்களிடம் உறுதியளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.