இராணுவ அதிகாரிகளை விடுத்து கல்வியின் தகுதிக்கு ஏற்ப அரசாங்கம் பதவிகளை வழங்க வேண்டும்- பாரூக்

இராணுவத்தில் ஓய்வு பெற்றவர்களை அரசின் உயர் பதவிக்கு அரசாங்கம் நியமிப்பதான குற்றச்சாட்டுக்கள் படித்த மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் தெரிவித்தார்.

அத்துடன், இந்த செயற்பாட்டை உடனடியாக நிறுத்தி கல்வியின் தகுதிக்கு ஏற்ப இலங்கையில் அரச சேவையில் உள்ளவர்களை பதவிகளுக்கு அரசாங்கம் அமர்த்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “தற்போது நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பினால் மக்கள் பல்வேறு துயரங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அரசாங்கம் பொருட்களின் விலையேற்றத்தினை கருத்திற்கொண்டு அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தற்போது அரச சேவையில் இருக்கின்றவர்கள் உயர் பதவிக்கு செல்ல முடியத நிலை காணப்படுகின்றது. இராணுவத்தில் ஓய்வு பெற்றவர்களை அரசின் உயர் பதவிக்கு அரசாங்கம் நியமிப்பதான குற்றச்சாட்டுக்கள் படித்த மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குறித்த செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டு கல்வியின் தகுதிக்கு ஏற்ப இலங்கையில் அரச சேவையில் உள்ளவர்களை பதவிகளுக்கு அமர்த்த வேண்டிய கட்டாய தேவையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது. அதனை முன்னெடுக்க வேண்டும்.

இதேவேளை, வேலையில்லா இளைஞர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. வேலையில்லா பாட்டதாரிகளின் தொகையும் அதிகரித்துச் செல்கின்றது.

இவர்களுக்கு அரச தொழில் வாய்ப்பை வழங்குவதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது என்ற உத்தரவாதத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.