மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம்: அதிர்ச்சியூட்டும் வங்கிக் கணக்கு விபரங்கள்!

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக (Batticalao Campus) நிறுவனத்துக்குச் சொந்தமான, இலங்கை வங்கியின் காத்தான்குடி கிளையில் உள்ள மூன்று வங்கிக்கணக்கு விபரங்களை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதிக் குற்றப் புலனயவுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (வியாழக்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவிடம் முன்வைத்த விசேட கோரிக்கையை அடுத்தே, குறித்த வங்கிக் கிளையின் முகாமையாளருக்கு நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதற்கு முன்னர், 13 வங்கிக் கணக்குகளை ஆராய கொழும்பு பிரதான நீதவான் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதியளித்திருந்தார்.

அந்த அனுமதியின் பிரகாரம் பெறப்பட்டிருந்த அறிக்கைக்கு அமைய, மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக நிறுவனத்தின், கொள்ளுபிட்டி இலங்கை வங்கிக் கிளையில் முன்னெடுத்துச் சென்ற வங்கிக் கணக்கின் கணக்குக் கூற்று, காசோலை வரவுக் குறிப்புக்கள், வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான குறிப்புக்கள், அட்டை கொடுக்கல் வாங்கல்கள் விபரங்கள் என அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டன.

இதன்படி, குறித்த வங்கிக்கணக்கு கடந்த 2016.01.04 ஆம் திகதி இலங்கை ரூபாய்களில் கொடுக்கல் வாங்கல்களைத் தொடர முடியுமான நடைமுறைக் கணக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டது.

அத்துடன், அந்த கணக்கை ஆரம்பிக்கும் செயற்பாடுகளில், குறித்த நிறுவனத்தின் தலைவர் மொஹம்மட் லெப்பை அலீம் மொஹம்மட் ஹிஸ்புல்லாஹ், பணிப்பாளர் அஹமட் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருடன் Expert Business Consultants எனும் தனியார் நிறுவனமும் தொடர்புபட்டுள்ளமை குறித்து நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

அத்துரலிய ரத்ன தேரர் 2019 ஜூன் 12 ஆம் திகதி முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய இடம்பெறும் குறித்த விசாரணைகளில், கடந்த 2016.01.14ஆம் திகதி முதல் 2019.05.31 ஆகிய காலப்பகுதியில் 206 தடவைகளில் குறித்த கொள்ளுபிட்டி வங்கிக்கிளையில் உள்ள கணக்குக்கு 4,436,282,426.71 ரூபாய் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்தது.

அத்துடன், அந்தப் பணத்தில் 4,436,246,122.24 ரூபாய் 825 தடவைகளில் அக்கணக்கிலிருந்து மீளப் பெறப்பட்டிருந்தன. அவ்வாறு குறித்த வங்கிக்கணக்கில் வைப்புச் செய்யப்பட்ட தொகையில், 3,640,939,488.72 ரூபாய் 7 தடவைகளில் சவூதி அரேபியாவின் INHERITANCE ALI ABDULLAH ALJUFFALIJEDDAH என்பவரால் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாகவும் எப்.சி.ஐ.டி. வங்கி அறிக்கையை பகுப்பாய்வு செய்து நீதிமன்றக்கு அறிவித்திருந்தது.

இவ்வாறான பின்னணியிலேயே தற்போது காத்தான்குடி இலங்கை வங்கிக் கிளை வங்கியில் உள்ள 3 கணக்குகளின் விபரங்களை விசாரணைகளுக்காக எப்.சி.ஐ.டி. கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.