மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை!

2011 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பணத்திற்காக கிண்ணத்தை தாரைவார்த்ததாக அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் உடனடியாக விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர்  சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டி இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் இடம்பெற்ற நிலையில், குறித்த போட்டியில் இந்திய அணி 06 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.

குறித்த போட்டி பணத்திற்காக தாரைவார்க்க்பபட்டதாக  அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே  ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரின் அறிவிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் தமது ட்விட்டர் கணக்கின் ஊடாக பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.

இதில், தேர்தல் அண்மித்துள்ள நிலையில் சர்க்கஸ் ஆரம்பமாகியுள்ளதாக மஹேல ஜயவர்தன குறிப்பிட்டிருந்தார். மேலும், போட்டிக் காட்டிக்கொடுக்கப்பட்டமை சம்பந்தமான சாட்சியங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுமாறு மஹேல ஜயவர்தன தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்ட குமார் சங்கக்கார, முன்னாள் அமைச்சர் அவரின் சாட்சியங்களை சர்வதேச கிரிக்கட் கவுன்சில் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுக்கு சமர்ப்பித்து விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் குறிப்பிட்டிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.