வடக்கு – கிழக்கு இராணுவ மயம் ஐ.நா. விசேட அறிக்கையாளர் காட்டமான அறிக்கை

“இலங்கையில் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் கூட இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் தீவிர இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் கண்காணிப்புக்களும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.”

– இவ்வாறு ஐ.நா. விசேட அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வோல் , ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பித்துள்ள வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்து நிலைமைகளை ஆராய்ந்ததன் அடிப்படையில் இந்த அறிக்கையை அவர் தயாரித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கையில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஊடகங்களும் பாதுகாப்பு அமைச்சால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களும் கண்காணிப்புக்கு உட்பட்டு வருகின்றன. அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களைப் பொறுத்து கண்காணிப்புக்கள் தீவிரத் தன்மை வேறுபடுகின்றது.

தொலைபேசி அழைப்புகளைக் கண்காணித்தல், வீடு அல்லது அலுவலகத்துக்குப் பின்தொடர்தல், உளவுத்துறைகள் ஊடாக ஒளிப்பதிவுகளைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற வகையிலும் கண்காணிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் படைத் தரப்பினர் மற்றும் உளவுத் துறையினரால் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான போராட்டங்களில் பங்கேற்போர் போராட்டங்களுக்கு முன்பும் பின்பும் அது குறித்து விசாரிக்கப்படுவதுடன், அச்சுறுத்தலுக்கும் ஆளாகின்றனர்.

பாதுகாப்புப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை உள்ளிட்ட உளவுத்துறை அதிகாரிகள் அடிக்கடி தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்குள் நுழைவது, கேள்விகளை எழுப்பி அவற்றின் உறுப்பினர்களைச் அச்சுறுத்தும் போக்கில் நடந்துகொள்வது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்துக்கு இரு மாதங்களுக்குள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் 6 தடவைகள் விஜயம் செய்து விசாரித்துள்ளனர்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பு பாதுகாப்புப் படையினருக்கும் புலனாய்வுத்துறையினருக்கும் அது குறித்து தகவல் அளிக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

நான் மேற்கொண்ட ஒரு சந்திப்பில்கூட சிவில் உடையில் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த ஒருவர் பிரசன்னமாகியிருப்பது குறித்து சிவில் சமூகப் பிரதிநிதி ஒருவர் என்னை உஷார்படுத்தினார். சந்திப்பு நடைபெற்ற இடத்துக்கு வெளியே அந்தச் சந்திப்பில் பங்கேற்றவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர்.

மற்றொரு இடத்தில் நான் பயணம் செய்த வாகனத்தின் இலக்கத்தை இராணுவத்தினர் அவதானித்துப் பதிவு செய்ததை கவனித்தேன்.

அச்சுறுத்தலான ஒரு சூழலை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான கண்காணிப்புக்கள் இடம்பெறுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்புக்களுடனான தொடர்புகளைப் பேணும் சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களைப் பழிவாங்கும் செயற்பாடாகவும் இந்தக் கண்காணிப்புக்கள் கருதப்படலாம்.

சிவில் சமூகப் பிரதிநிதிகள், அமைதியான போராட்டங்களில் பங்கேற்பவர்கள் மற்றும் ஏனைய தரப்பினர் கண்காணிக்கப்படுவது, அச்சுறுத்தப்படுவது தொடர்பில் கிடைத்த அறிக்கைகள் கவலை அளிக்கின்றன.

இத்தகைய கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் அவநம்பிக்கை மற்றும் அச்சமான சூழலை உருவாக்குகின்றது. இது சுய தணிக்கைக்கும் வழிவகுக்கின்றது” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.