உயர்தரப் பரீட்சைக்கான திகதி குறித்து பரிசீலிப்பதற்கு குழு நியமனம்!

உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி தொடர்பில் முன்வைக்கப்படும் யோசனைகளை பரிசீலிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் M.H.M.சித்ரானந்த தமது தலைமையில் இந்தக் குழு செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த குழுவில் கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளரும் ஏனைய மேலதிக செயலாளர்கள் இருவரும் அடங்குகின்றனர்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளை அதிபர்களூடாக அமைச்சிற்கு வழங்குமாறு அனைத்து வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இம்முறை உயர்தரப் பரீட்சையை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தினத்தில் நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் இந்த கருத்துகள் மற்றும் யோசனைகள் பரிசீலிக்கப்பட்டதன் பின்னரே எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை கிடைத்த கருத்துகளின் அடிப்படையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதியான செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை நடத்துவதற்கு முடியும் என பல தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.