உலகக் கிண்ணத்தை தாரைவார்த்ததாக கூறிய விடயம் – மஹிந்தானந்தவின் காரியாலயத்திற்கு விரைந்த பொலிஸ் குழு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் நாவலப்பிட்டியில் உள்ள காரியாலயத்திற்கு விசேட பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணை பிரிவின் அதிகாரிகள் குழு நாவலப்பிட்டியில் அமைந்துள்ள அவரின் இல்லத்திற்கு இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு சென்று வாக்குமூலம் பதிவு செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2011ஆம் ஆண்டு உலக கிண்ண இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பாகவே அவரிடம் இதன்போது வாக்கு மூலம்  பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த  முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில், பணத்திற்காக கிண்ணத்தை தாரைவார்த்ததாக  தெரிவித்தார்.

இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் கிண்ணத்தை வெற்றிகொள்வதற்கான தகுதி இலங்கை அணியிடம் காணப்பட்ட போதிலும், பணத்திற்காக அது தாரைவார்க்கப்பட்டதை தாம் பொறுப்புடன் கூறுவதாகவும் இந்த விடயம் தொடர்பாக விவாதத்தில் ஈடுபடுவும் தாம் தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விடயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மஹிந்தானந்த அளுத்கமகேவின் நாவலப்பிட்டியில் உள்ள காரியாலயத்திற்கு விசேட பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.