ஆட்டநிர்ணய சதி குறித்து முக்கிய ஆதாரம் – மஹிந்தானந்த வாக்குமூலம்

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றது என்பதற்கான ஆவணங்களை பொலிஸாரிடம் கையளித்துள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக்கிண்ணப் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்ட கருத்து இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது தொடர்பாக மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் இன்று (புதன்கிழமை) வாக்குமூலம் பதிவுசெய்தனர்.

நாவலப்பிட்டியவில் உள்ள அவரின் அலுவலகத்தில் வைத்தே சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது. இதனையடுத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண போட்டித்தொடரின் இறுதி ஆட்டத்தை கண்காணிப்பதற்காக நானும் சென்றிருந்தேன். எமது அணி தோல்வி அடைந்தமை தொடர்பாக எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதன்பின்னர் பல தரப்பினரும் குறித்த போட்டி தொடர்பில் எனக்கு முறைப்பாடுகளை முன்வைத்தனர். இது தொடர்பாக இரு தடவைகள் நான் கருத்து வெளியிட்டிருந்தாலும் இம்முறையே பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. நான் எந்தவொரு வீரரினதும் பெயரை குறிப்பிடவில்லை.

ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான கருத்துகளையும் ஆவணங்களையும் நான் இன்று பொலிஸாரிடம் கையளித்தேன். 24 காரணங்கள் அடங்கிய 6 பக்க அறிக்கையை முன்வைத்துள்ளேன். விசாரணைகள் இடம்பெறுவதால் அவை எவ்வாறான விடயங்கள் என கூறமுடியாது.

நான் அரசியல் நோக்கிலோ அல்லது பிரசாரம் தேடுவதற்காகவோ இவ்வாறு கருத்து வெளியிடவில்லை. எனவே, விசாரணைகள் முடிவடையும்வரை விமர்சனங்களை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். பேசுவதை நிறுத்துவோம். விசாரணை அறிக்கை வரும்வரை காத்திருப்போம்” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.