தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் இலங்கை – 5 சர்வதேச அமைப்புகள் கூட்டாகக் கோரிக்கை

 ஊடகவியலாளரும் மனித உரிமை பாதுகாவலருமான தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என 5 சர்வதேச அமைப்புகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு, சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட 5 சர்வதேச அமைப்புகளே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.

தரிஷா பஸ்டியனுக்கு  எதிரான நடவடிக்கைகள் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ள இந்த அமைப்புகள், தரிஷா பஸ்டியனை துன்புறுத்துவதை நிறுத்தி அவரது பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.

சுவிஸ் தூதரகப் பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இலங்கை அரசு முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கும் விசாரணைகளில் சி.ஐ.டியினர் தரிஷா பஸ்டியனைத் தொடர்ந்து இலக்குவைக்கின்றனர் என சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற பின்னர் 2019 டிசம்பர் முதல் சி.ஐ.டியினர் தரிஷா பஸ்டியனையும் வேறு பலரையும் சுவிஸ் தூதரகப் பணியாளரின் போலியான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் தொடர்புபடுத்த முயன்றுள்ளனர் எனத் தெரிவித்துள்ள சர்வதேச அமைப்புகள், சதி முயற்சி இடம்பெற்றதாகக் காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனபோல் தோன்றுகின்றது எனவும் தெரிவித்துள்ளன.

அரச ஊடகங்கள் தரிசா பஸ்டியனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராகத் திட்டமிட்ட பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன என்றும், சமூக ஊடகங்களில் அவரைத் துரோகி மற்றும் குற்றவாளி என முத்திரை குத்தும் பிரசாரங்களும் இடம்பெறுகின்றன எனவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தரிஷா பஸ்டியன் சண்டே ஒப்சேவரின் ஆசிரியராகப் பணியாற்றியவர். நியூயோர்க் டைம்சிற்கும் பங்களிப்பு செய்பவர். மனித உரிமைகள், இராணுவ மயமாக்கல், ஊழல், மதச் சுதந்திரம், ஜனநாயகம், அரசியல் உரிமைகள் போன்ற இலங்கையுடன் தொடர்புபட்ட விடயங்கள் குறித்து அவர் எழுதியுள்ளார் எனத் தெரிவித்துள்ள சர்வதேச அமைப்புகள், அவரது எழுத்துகள் தொடர்ச்சியான ஆட்சியாளர்களினால் இலக்குவைக்கப்படும் மக்களின் போராட்டங்களை வெளிக்கொண்டு வந்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளன.

குறிப்பாக இன, மத சிறுபான்மையினரின் நெருக்கடிகளை வெளிக்கொண்டு வந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளன.

தரிஷா பஸ்டியனின் பத்திரிகை பணி காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் இலக்கு வைக்கப்படுவது இது முதல் தடவையல்ல எனத் தெரிவித்துள்ள சர்வதேச அமைப்புகள், அவர் இலங்கையில் பலவந்தமாகக் காணாமல்போகச் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான போராட்டம் குறித்து எழுதியுள்ளார் எனவும் மேலும் தெரிவித்துள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.