சிறு வியாபார துறையினரின் முன்னேற்றத்திற்கு இடமளியுங்கள் – ஜனாதிபதி

அரசாங்கம் தேவையற்ற வகையில் தலையிட்டு சிறியளவிலான வியாபாரத் துறைகளின் முன்னேற்றத்திற்கு தடையாக அமையாமல்,  செய்ய வேண்டியது வசதிகளை வழங்கி அபிவிருத்திக்கு உதவுமாறு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அழகுக் கலை, சிகையலங்கார துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று ( வியாழக்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அழகுக் கலை, சிகையலங்கார துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் தொழிற்திறனை மேம்படுத்துவதும், நிதி வசதிகளை வழங்குவதும், வர்த்தக மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்குவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அனேகமானவர்களின் வேண்டுகோளின் பேரில் தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் உதவியை அழகுக் கலை துறைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார். அது அவர்களை கடப்பாடுகளுக்கு உட்படுத்துவதாகவன்றி தேவையை நிறைவேற்றுவதற்கு பங்களிப்பதற்காக மட்டுமேயாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சிறிய, நடுத்தர மற்றும் பாரியளவிலான சுமார் 90000 அழகுக்கலை நிலையங்கள் நாட்டில் உள்ளன. நான்கரை லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இத்துறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சுமார் 15 லட்சம் குடும்பங்கள் தங்கியுள்ளன.

அழகுக்கலையை ஒரு வாழ்க்கைத் தொழிலாக சிறப்பாக பேணுவதற்கு தேவையான பயிற்சிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. தேசிய தொழிற்தகைமைகள் பாடநெறியின் (NVQ) 05,06 மற்றும் 07 ஆகிய கட்டங்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இத்துறையின் பிரச்சினைகள் குறித்த தெளிவுடன் இருப்பது குறித்து ஜனாதிபதிக்கு அழகுக்கலை துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர உள்ளிட்ட அமைச்சுக்களின் செயாலாளர்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அனுஷ்க குணசிங்க மற்றும் அழகுக்கலை, சிகையலங்கார துறை முன்னோடிகள் சிலரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.