தமிழரசுக்கட்சி ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் நிதி குறித்து விமலேஸ்வரி கேள்வி

புலம்பெயர் அமைப்புகளினால் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் நிதி குறித்து தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் கூறுகையில், “ஈழத்தில் இடம்பெற்ற போரினால், பெண் தலைமைத்துவக் குடும்பங்களே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கப்பால் வடக்கு கிழக்கில் நுண் நிதிக்கடன் பிரச்சினைகளால் பலர் குடும்பத்தோடு தற்கொலை செய்த சம்பவங்கள் இடம்பெற்றன. பலர் குடும்பங்களோடு தலைமறைவு வாழ்க்கை நடத்துமளவுக்கு தள்ளப்பட்டனர்.

மேலும் பல ஆயிரம் குடும்பங்கள் நுண் நிதிக்கடன்களினால், நாளாந்த வருமானத்தை கடனுக்கு செலுத்திவிட்டு வறுமைக்குள் சிக்குண்டிருந்தனர்.

இவ்வாறான மக்களை கடன் சுமையிலிருந்து மீட்கவும் சுய வருமானத்தை கட்டியெழுப்பி அவர்களை வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும் கனடாவிலுள்ள புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள், தமிழரசுக் கட்சியூடாக 21 கோடியே 20 இலட்சம் (212 மில்லியன்) ரூபாய் வழங்கியிருந்தனர்.

குறித்த நிதி வழங்கப்பட்டமை தொடர்பாக அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் மகளிர் கூட்டத்தில் குகதாசன் என்பவரால் வெளிப்படுத்தப்பட்டபோதும், நிதிப் பயன்பாடு குறித்து இன்றுவரை தெளிவுப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் பொருளாளர் கனகசபாபதியால் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதுடன் தமிழரசுக்கட்சியின் வங்கிக் கணக்கு கூற்றுக்களில் குறித்த நிதி வரவு வைக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

நானும் இது குறித்து கேள்வியியை தொடர்ந்து எழுப்பியதன் பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தானே குறித்த நிதியினை கனடாவிலிருந்து பெற்று வந்ததாக குறிப்பிட்டார்.

ஆனால் நுண்நிதிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கோ பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கோ குறித்த நிதியிலிருந்து இதுவரை எந்த உதவிகளும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் தமிழரசுக்கட்சி ஊடாகக் கிடைத்த நிதிக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை செய்வதற்கு அழுத்தம் கொடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.