கருணா அம்மானிற்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்களானால் ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும்

பாறுக் ஷிஹான்

கருணா அம்மானிற்கு  தமிழ் மக்கள் வாக்களிப்பார்களானால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரே ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.மன்சூர் தெரிவித்தார்.

அம்பாறை  திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சம்மாந்துறை தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி தொலைபேசி சின்னம் இலக்கம் 6 இல் போட்டியிடும் இவர்   திங்கட்கிழமை(29) இரவு விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தளவில் பொதுஜன பெரமுன கட்சிக்கு  எதிராக களமிறங்கியுள்ள தொலைபேசி சின்னம் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அம்பாறை மாவட்டத்தில் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்ற நிலவரம் இருக்கின்றது. எமக்கு  சவாலாக பல முஸ்லிம் சகோதரர்கள் பல கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் ஊடாக களமிறங்கியுள்ள நிலைமை ஓரளவு மக்களின் ஏகோபித்த தீர்மானத்திற்கு சவாலாக இருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

அம்பாற மாவட்டத்தில்  ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வெல்வதற்காக களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் தவிர்ந்த ஏனைய தரப்பினர்கள்   தோல்வி அல்லது பாராளுமன்ற பிரதிநித்துவத்தை குறைப்பதற்கு வழி வகுப்பார்கள் என்ற உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றி  அதிகாரத்தை தன்வசப்படுத்திக் கொண்ட விடயம் எல்லோருக்கும் தெரியும் அதேபோல் இம்முறையும் அதிகாரத்தைக் கைப்பற்றி விட வேண்டும். முஸ்லிம் மக்களின் உரிமை முஸ்லிம் காங்கிரஸ் ஊடாகவே இருக்கின்றது. எனவே தான் அதன் ஏற்பாட்டில் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்தால் மாத்திரமே அது சாத்தியப்படும்  என்பதனை புத்திஜீவிகளும் மக்களும் விளங்கி இருக்கிறார்கள்.

இன்று பல பேர் பல்வேறு கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் ஊடாக   ஐக்கிய மக்கள் சக்திக்கு சவாலான முறையில் களமிறங்கியுள்ளனர்.இந்நிலைமை   மக்களை குழப்புகின்ற நிலைமையை தோற்றுவித்திருக்கின்றது. எவ்வாறென்றால் ஊருக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை பெற்று விட வேண்டும் என்ற கோஷத்தோடு மக்களை குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

இது விகிதாசார தேர்தல் முறையில் காணப்படுவதுடன்  ஆகக்குறைந்தது 50 ஆயிரம் வாக்குகளை பெறாத எந்த கட்சியும் பாராளுமன்ற உறுப்பினரை பெறமுடியாது. இதற்கு உதாரணம்  கடந்த முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட 33 ஆயிரம் வாக்குகளால் ஒரு பிரதிநிதி பெறமுடியவில்லை என்ற பாடத்தை மக்கள் விளங்கி இருக்கிறார்கள்.

முஸ்லிம் மக்களை இவ்வாறானவர்கள்  முகஸ்துதிக்காக  சந்தித்திருக்கிறார்கள்.இதனால்  ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் மிகப் பாரதூரமான நஷ்டத்துக்கு தள்ளப்படுகின்றனர்.இது  ஒரு எதிர்வினை நிலைமையை தோற்றுவிக்கும். இதனால் எதிர்கால சந்ததியின் எதிர்காலம் மிகப் பயங்கரமாக இருக்கும்.

ஏனென்றால் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷத்தோடு சட்டங்களை மாற்றிக் கொண்டு  இருக்க வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் உள்ள அரசாங்கம் இவ்வாறான சட்டதிட்டங்களை மாற்றியமைக்கக்கூடிய பெரும்பான்மை சில வேளை பொதுஜன பெரமுவிற்கு கிடைக்குமாக இருந்தால் அதன் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் எமது பிரதிநிதித்துவத்தை  வைத்து  எமக்கான எந்த ஒரு அரசியலும் அணுகுமுறையும் ஒருபோதும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற ஒரு பாரிய ஆபத்து இருக்கின்றது.

தமிழ் மக்களைப் பொறுத்தளவில் கருணா அம்மான் தனித்துவமான ஒரு காட்சியிலே போட்டியிடுகின்றார் அவருக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்களானால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரே ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் எதுவாயினும் தமிழ் மக்கள் தங்களுக்கு ஒரு ஆறுதலான தமிழ்மகன் ஒரு பிரதிநிதியாக இருக்கின்ற விடயத்தில் மிக கவனமாக இருப்பார்கள் என நம்புகின்றேன். கருணா அம்மான் கூட இந்த தேர்தலில் தோற்கடிக்க படுவார் அவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி தவிர்ந்த சிறுபான்மை கட்சி சார்பாக களம் இறங்கியிருக்கின்ற எந்த ஒரு கட்சியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெறாமல் தோல்வி அடைவார்கள் அந்த வகையில் அவர்களுக்கு அளிக்கும் எந்த ஒரு வாக்கும் பிரயோசனம் அற்றது என கருதி தெளிவான ஒரு முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.