வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்துக்கு வழங்கப்பட்ட 396 படகுகளுக்கு என்ன நடந்தது – அருண் கேள்வி

வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை கடந்த காலத்தில் முதலமைச்சராக இருந்த  சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அபிவிருத்தி செய்தார் எனக் கூறுபவர்கள் துறைமுகத்துக்கு என வாங்கப்பட்ட 396 படகுகளுக்கு என்ன நடந்தது என கூறவேண்டும் என மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை வேட்பாளருமான அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாகரையில்  தேர்தல் பிரச்சாரத்துக்கான கட்சி அலுவலகம் நேற்று (செவ்வாய்க்கிழமை)   மாலை   திறந்துவைத்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக தமது அதிகாரத்தைப் பாவித்து இந்த மாவட்ட மக்களுக்கு சேரவேண்டிய விடயங்களை விட்டுவிட்டு வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் உதவி கிடைக்கச் செய்துள்ளனர்.

போர் முடிவுக்குவந்து 10 அண்டுகள் முடிவடைந்த பின்னும் இன்னும் எமது மக்களின் அடிப்படைப் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. கதிரவெளி போன்ற கிராமங்கில் இருந்து கந்தளாய் வரை தொழிலுக்காக இங்குள்ள யுவதிகள் செல்கின்றார்கள், வாகரை வளங்கள் வாகரை மக்களுக்கு சென்றடைவதில்லை

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை அக்காலத்தில் முதலமைச்சராக இருந்த பிள்ளையான்; என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் காலத்தில் அபிவிருத்தி செய்தோம் எனக் கூறுபவர் அந்த துறைமுகத்து ஸ்பெய்ன் நாட்டிடமிருந்து அரசாங்கம் 400 படகுகளை கடனாகப் பெற்றது.

அந்த 400 படகுகளில் 4 படகுகளைத் தவிர ஏனைய 396 படகுகளும் வாழைச்சேனை துறைமுகத்திற்கு வரவில்லை.  எனவே 396 படகுகளுக்கும் அவர்தான் என்ன நடந்தது என கூறவேண்டும்.

அதேபோது அடிப்படையாக நாங்கள் உணரவேண்டிய விடயம் என்னவென்றால், அக்காலத்தில் அரசியலில் இருந்தவர்களெல்லாம் அபிவிருத்தி என்று தங்களின் செயற்பாடுகளை காட்டும்பொழுது அதன் குறைபாடுகளையும் அந்த குறைபாடுகளுக்கான காரணங்களையும் அவர்கள் கூறவேண்டும்.

அடுத்த 30 நாட்களில் நாங்கள் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் சென்று அக்காலத்தில் அபிவிருத்தியை முன்னெடுத்தவர்களாக இருக்கட்டும் அல்லது உரிமை என்று பேசி பத்து வருடங்களை விணாக்கியவர்களாக இருக்கட்டும் அவர்களிடம் பல கேள்விகள் கேட்க இருக்கின்றோம்.

586 சதுர கிலோ மீற்ரறைக் கொண்ட வாகரையில் இன்னும் மலையகத்தைப்போல ஏழு ஏழு பேச்சஸ் நிலத்தைக் கொடுத்து அதன்மூலமாக பயன்பெறாக நிலையில் மக்கள் இருக்கின்றனர். வாகரை நிலப்பகுதியில் இரண்டு இரண்டு ஏக்கராக விவசாயத்திற்கு கொடுப்பதன்மூலம் எமது மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என நான் நம்புகின்றேன்.

நாங்கள் இந்தத் தேர்தலில் ஒரு திட்டவட்டமான கருத்தை முன்வைக்க இருக்கின்றோம். முக்கியமாக வாகரையில் ஒரு தொழில்பேட்டை அதேபோல் மீன்பிடித் துறைமுகம் என்பவற்றை கொண்டுவரவேண்டும் என்பதில் தெழிவாக இருக்கின்றோம்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற்றால் ஆட்சியமைக்கும் அரசுடன் பேரம் பேசி  அரசுடன் இணைந்து செயற்படுவோம் எனவே இந்த  நாடாளுமன்ற தேர்தலிலே தகுதி உள்ளவர்களை, படித்தவர்களை, ஆற்றல் உள்ளவர்களை மக்கள் தெரிவு செய்வார்கள் என்று முழுமையாக நம்புகின்றோம்.” என அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.