அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால்தான் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்- சஜித்

நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால்தான் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தேர்தல் பிரசார கூட்டத்தில் சஜித் மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப்புலிகளின் காலத்தில் நாட்டில் மோசமான பல சம்பவங்கள் இடம்பெற்றன.

அவற்றை எல்லாம் வைத்து ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் குற்றவாளிகளாக பார்த்தமை மிகவும் மோசமான செயலாகும்.

அதேபோன்று, ஈஸ்டர் தாக்குதலை அடுத்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் குற்றத்தை திணிக்க முடியாது. பௌத்த மதத்திலும் அவ்வாறான இனவாத சிந்தனை கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எனது தந்தை ரணசிங்க பிரேமதாச, இனங்களுக்கிடையில் எவ்வாறு புரிந்துணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை எனக்கு கற்றுத் தந்துள்ளார்.

நாம் அனைவரும் இந்நாட்டில் ஒற்றுமையாக வாழ்ந்தால் மட்டுமே, இந்த சிறிய நாட்டை கட்டியெழுப்ப முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.