எமது போராட்டங்களையும், உயிர்த்தியாகங்களையும் தமது வாக்குச் சேகரிப்புக்குப் பயன்படுத்த வேண்டாம்…
எமது போராட்டங்களையும், உயிர்த்தியாகங்களையும் தமது வாக்குச் சேகரிப்புக்குப் பயன்படுத்த வேண்டாம்…
(தமிழ் அரசியல்வாதிகளிடம் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி வேண்டுகோள்)
கடந்த காலங்களில் தங்கள் பதவிகளால் ஏதேனும் சேவைகள் ஆற்றப்பட்டிருந்தால் அதனைச் சொல்லி வாக்குக் கேளுங்கள் எமது போராட்டங்களையும், உயிர்த்தியாகங்களையும் தமது வாக்குச் சேகரிப்புக்குப் பயன்படுத்த வேண்டாம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா வேண்கோள் தமிழ் அரசியல்வாதிகளிடம் விடுத்துள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஐந்து தசாப்தங்களாக இனவாதம் புறையோடிப்போயிருந்த இந்நாட்டில் தமிழ் மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, காணிப்பிரச்சினை என பலதரப்பட்ட துறைகளில் புறிக்கணிப்பட்ட நிலையில் காலத்திற்குக் காலம் ஏற்பட்ட இனப்பிரச்சினைகளில் உயிர், உடமைகளை இழந்து அநாதைகளாக்கப்பட்ட காலங்களில் இக்கொடுமைகளைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாமலும், இதனைத் தட்டிக் கேட்க எவருக்கும் திரணியில்லாத காரணத்தினாலும் கையிலிருந்த பாடசாலைப் புத்தகங்களைத் தூக்கியெறிந்து விட்டு இவற்றைத் தட்டிக் கேட்க ஆயுதமேந்தியவர்கள்தான் நாம்.
எத்தனையோ பலதரப்பட்ட ஆயுதக் குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியிலே தோன்றினாலும், அவை ஆயுதம் ஏந்தியதன் நோக்கத்தை நோக்கிப் பயணிக்கத் தவறின அல்லது மாறி மாறி பதவிக்கு வந்த அரசுகளால் திசைதிருப்பப்பட்டன. ஆனால் விடுதலைப் புலிகளாகிய நாம் இறுதிவரை போராடினோம். அரசு சர்வதேச நாடுகள் பலவற்றுடன் சேர்ந்த மேற்கொண்ட சதியினால் எமது ஆயுதங்கள் மொளினிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இலங்கையில் தமிழ் இனம் என ஓர் இனம் உண்டு. அவ்வினத்திற்குப் பிரச்சினைகள் உண்டு என்னும் விடயம் சர்வதேச மட்டத்தில் விவகாரமாக உருவெடுப்பதற்குக் காரணம் எமது மாபெரும் பொராட்டமும், உயிர்த் தியாகமுமேயாகும்.
அவ்வாறிருக்க அந்நிலைமைக்கு உரிமை கொண்டாடுவதற்கு எந்தவொரு தமிழ் அரசியல்வாதிகளுக்கும் உரிமை கிடையாது. அவர்கள் வேண்டுமானால் அப்பாவி மக்களுக்குப் பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்கள் போடும் வாக்குப் பிச்சையில் அவர்கள் வாழ்க்கையைக் கொண்டு செல்லட்டும். ஆனால், எமது போராட்டங்களையும், உயிர்த்தியாகங்களையும் தமது வாக்குச் சேகரிப்புக்குப் பயன்படுத்த வேண்டாம். கடந்த காலங்களில் தங்கள் பதவிகளால் ஏதேனும் சேவைகள் ஆற்றப்பட்டிருந்தால் அதனைச் சொல்லி வாக்குக் கேளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை