ஒரு சிலர் செய்த அந்த தவறுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் தண்டிக்க முடியாது: சஜித் பிரேமதாச

-வவுனியா நிருபர் –

உதிர்த்த ஞாயிறு தாக்குதலும் இந்த நாட்டில் ஒரு மோசமான சம்பவம். அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு சிலர் செய்த அந்த தவறுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் தண்டிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் உள்ள எல்லா கிராமங்களின் அபிவிருத்தியையும் ஐக்கிய மக்கள் சக்தி செய்து தரும் என்ற உறுதியை நாம் உங்களுக்கு தருகின்றோம். நான் பௌத்த சமயத்தை நேர்மையாக பின்பற்றுபவன் என்ற வகையில் எல்லோரையும் ஒற்றுமையாக வாழ வைக்க வேண்டும் என விரும்புகிறேன். இன, மத பேதமின்றி எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வதற்கு எமது சமயம் வழிகாட்டுகின்றது. அதன்படி வாழ வேண்டும் என நினைக்கின்றேன். இன, மத, பேதமின்றி ஒருவருக்கும் கஸ்ரங்கள் கொடுக்காது வாழ வேண்டும் என வழிகாட்டும் மார்க்கம் தான் புத்த மார்க்கம். ஆனால் சிலர் அதற்கு மாறாக செயற்படுகிறார்கள். ஆனால் நான் அப்படியல்ல. பௌத்த மார்க்கத்தை சரியாக கடைப்பிடிப்பவன் என்ற அடிப்படையில் இனங்களுகடக்டையேயும், மதங்களுகடகிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்த செய்படுவேன் என கூறுகின்றேன்.

பொதுவாக எல்லா மதத்திலும் சிலர் பிழையான பாதையில் செல்வதைப் பார்கின்றோம். அதிகமான மக்கள் நல்லதையே செய்கிறார்கள். சிலர் அடிப்படைவாத, பயங்கரவாத, இனவாத சிந்தனை கொண்டவர்களாகவுள்ளனர். விடுதலைப் புலிகளால் பல துன்பமான சம்பவங்கள் எல்லாம் நடந்தது. அதனை வைத்து தமிழ் மக்களை குற்றவாளிகளாக பார்ப்பது தவறு. ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒரு சமூகத்தையே பழி சொல்ல முடியாது. அதேபோல் உதிர்த்த ஞாயிறு தாக்குதலும் இந்த நாட்டில் ஒரு மோசனமான சம்பவம். அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு சிலர் செய்த அந்த தவறுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் தண்டிக்க முடியாது. அதேபோல் பௌத்த சமயத்தவர் மத்தியிலும் ஒரு சில இனவாத சிந்தனை கொண்டவர்கள் இருக்கிறார்கள். எனது தந்தை ரணசிங்க பிரேமதாச அவர்கள் இந்த நாட்டில் இனங்கள், மதங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று சொல்லி தந்தார்கள். எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள். அதன் மூலமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். இந்த சிறிய நாட்டில் வாழுகின்ற எல்லா இனத்தவரும், மதத்தவரும் ஒரு தாய் பிள்ளைகளாக வாழ வேண்டும்.

ஒற்றுமையாக, சந்தோசமாக இனங்களுக்கிடையில் பிரிவினைகள் இன்றி பிரிந்து விடாமல் வாழ பழகுவோம். அது தான் எமது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாகும். உங்களிடத்தில் நான் வேண்டுவது ஒற்றுமையாக வாழ்ந்து கொள்ளுங்கள். இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மதங்களுக்கிடையில் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளுங்கள். இந்த அழகான தேசத்தை அழிப்பதற்காக, பிரித்து ஆள்வதற்காக, தமது அரசியலுக்காக, ஆட்சியில் நீண்டகாலம் நிலைத்திருப்பதற்காக சதிகாரர்கள் சதி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவற்றுக்குள் உட்படாமல் நீங்கள் வாழ பழகிக் கொள்ளுங்கள்.

இந்த நாட்டில் வாழும் மக்கள் பசியோடும், பட்டினியோடும் வாழக் கூடாது. நாங்கள் உழுது வாழ்பவர்கள். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பு உடையவர்களாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுக்க வேண்டும். அவ்வாறான திட்டங்களை நாம் முன்வைத்த போதும் அதனை நடைமுறைப்படுத்த வில்லை. எனவே இந்த தேர்தலில் நீங்கள் சரியாக செயற்பாட்டால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்று எதிர்கால சந்ததி வளம் பெறும் வகையில் பொருளாதார திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.

நான்கு பேரைக்கொண்ட குடும்பத்திற்கு குறைந்தது இருபதனாயிரம் ரூபா அத்தியாவசிய தேவையாக உள்ளது. ஆகவே அதற்காக திட்டத்தினை மேற்கொண்டு வழங்க வேண்டும் என்ற சிந்தனையோடு நாங்கள் கடந்த காலத்தில் முயற்சித்திருந்தோம். ஆனால் அவ்வாறான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கவில்லை. எனவே இனியாவது பொருளாதார மீட்சியுடன் வாழ்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியோடு கைகோருங்கள்.

ஆகவே ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நீங்கள் அளிக்கும் வாக்குகளினால் நாங்கள் நல்லாட்சி ஒன்றினை அமைத்து இருபத்தி நான்கு மணி நேரத்தில் மண்ணெண்ணை பெற்றோல் டீசலில் விலையை குறைத்து அதனூடாக மக்களுக்கு வரப்பிரசாத்தினை வழங்குவேன் என்பதனை கூறிக்கொள்கின்றேன்.

அத்துடன் வீடுகள் இல்லாத பிரச்சனைகளுக்காக கடந்த காலத்தில் நாங்கள் வீடுகளை அமைத்துகொடுத்திருந்தோம். அந்தவகையில் எதிர்வரும் காலங்களில் ஒட்டுமொத்த மக்களும் எமக்கான ஆதரவை தந்து நான் பிரதமராக வருகின்ற போது 2025 ஆம் ஆண்டுக்கள் வீடில்லாத அனைவரது பிரச்சனையையும் தீர்த்து வைப்பேன் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் சுயதொழில் மேற்கொள்ளும் குடும்பங்களின் வாழ்வாதரத்தினை வலுப்படுத்தும் செயற்றிட்டத்தினை நாம் முன்னெடுப்போம். அத்துடன் மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்த பாரிய திட்டங்களை முன்னெடுப்போம். அத்துடன் சுயதொழில் முயற்சிகளை மேம்படுத்துவோம் என தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் வன்னி மாவட்ட வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.