மக்களின் மின் கட்டண பழுவை குறைக்கவும் – வி.ஜனகன் அவசர கோரிக்கை!

கொவிட் 19 வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்ட கடந்த மூன்று மாத காலப்பகுதியில் நாட்டு மக்களால் நுகரப்பட்ட அதிகரித்த மின்சார அலகுகளுக்கான கட்டணம் இன்று மக்களுக்கு ஒரு பாரிய சுமையாக மாறியுள்ளது.

இந்த பிரச்சினைக்கான நிவாரணத்தை அரசாங்கம் உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான கட்சிக் காரியாலயத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “குறிப்பாக பொதுமக்கள் தற்போது அதிகளவில் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலையில் 3 மாதங்களுக்கான மொத்த மின்சார கட்டணத்தையும் அவர்களின் மேல் திணிப்பதால் தொடர்ந்தும் மக்கள் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, மூன்று மாதக் கட்டணங்களை எவ்வாறு மொத்தமாக செலுத்துவது அல்லது அதற்கான வருமானத்தை எவ்வாறு ஈட்டிக் கொள்வது என்ற குழப்பமான சூழ்நிலையில் தற்போது அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், கடந்த மூன்று மாதங்களாக பொது மக்களை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்தது. கொவிட் 19 தொற்று பாதிப்பு காரணமாக இந்த அவசர கால நிலையை அமுல்படுத்த வேண்டிய தேவையும் அரசாங்கத்திற்கு இருந்தது.

அந்த காலகட்டத்தில் முன்னர் பயன்படுத்திய மின்சாரத் தேவைக்கும் மேலதிகமாக மின்சாரத்தை நுகர வேண்டிய தேவையும் மக்களுக்கு இருந்தது.

அதேவேளை, மின்சார பாவனை மானியை கடந்த மூன்று மாதங்களாக அளவீடு செய்யாமல் ஒரே நேரத்தில் அதனை அளவீடு செய்தமையாலும், அந்த அளவீட்டுக்கு ஒரு நிலையான பெறுமதியை வழங்கி அதனை மின்சார கட்டணமாக மாற்றியதும் அளவுக்கு அதிகமாக மின்சார கட்டணம் வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

எனவே, மூன்று மாதங்களாக வீட்டுக்குள் அடங்கியிருந்தமை மக்களுடைய குற்றம் அல்ல, ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் மக்களுக்கு மின்சார நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

இலங்கையில் மாத்திரமல்ல பல நாடுகளிலும் இவ்வாறான நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இலங்கை மக்கள் தற்போது தங்களின் வருமானத்தையும், வாழ்வாதாரத்தையும் மீளமைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அரசாங்கத்தின் நிவாரணங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

அதேநேரம் மின்சார பாவனையாளர்கள் தங்களின் கட்டணப்பட்டியலில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அல்லது கூடிய கட்டணங்கள் அறவிடப்பட்டிருப்பின் தங்கள் பிரதேசத்திற்கு உரிய அலுவலகங்களுக்கு சென்று முறையிட வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.