நாடாளுமன்றத் தேர்தல் பணியில் 5 ஆயிரம் கண்காணிப்பாளர்கள்…

ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்புக் கடமையில் 5 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இவர்களில் நீண்டகால கண்காணிப்பாளர்களும் உள்ளடங்குகின்றனர் எனவும், தபால் மூல வாக்களிப்புக்கும் கண்காணிப்புக் குழுவொன்று ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இம்முறை பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும், அங்கீகரிக்கப்பட்ட 40 அரசியல் கட்சிகள் மற்றும் 313 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 7,452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் நாடு முழுவதிலுமுள்ள மாவட்டங்களிலிருந்தும் 196 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அத்துடன் தேசியப் பட்டியல் மூலம் 29 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தபால் மூல வாக்களிப்புக்கான கண்காணிப்புக்காக, அரசியல் ரீதியில் அதிக ஆர்வமுள்ள பிரதேசங்கள் மற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிமுள்ள பிரதேசங்களைக் கருத்தில்கொண்டு, 856 வாக்கெடுப்பு நிலையங்களை தெரிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த வாக்களிப்பு நிலையங்களில் கண்காணிப்பாளர்களைக்  கடமையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் தினத்தன்று இடத்தில் நிலைநிறுத்தப்பட்டு கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்காக 3 ஆயிரம் பேரை ஈடுபடுத்துவதற்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வாக்களிப்பு நிலையத்துக்கு இடையிலான நிலைமையைக் கண்காணிப்பதற்கான நடமாடும் கண்காணிப்பு பணியில் 200 பேரை ஈடுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்காக ஆயிரம் கண்காணிப்பாளர்கள்  ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வாக்கெண்ணும் நிலையங்களிலும் கண்காணிப்பாளர்களை நிறுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 5 ஆயிரத்துக்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.