போதைப்பொருள் கடத்தல்: 5 வருடங்களில் 61 பேருக்கு மரண தண்டனை விதிப்பு…
“போதைப்பொருள் கடத்திய 61 பேருக்கு கடந்த ஐந்து வருடங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 160 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.”
– இவ்வாறு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, கவும் கூறினார்.
அத்துடன் 582 மரண தண்டனை விதிப்பு வழக்குகள் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் 4 ஆயிரத்து 338 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றை வைத்திருந்த மற்றும் கடத்திய ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 257 பேர் கைதுசெய்யப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 27 ஆயிரத்து 500 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 2 இலட்சத்து 52 ஆயிரத்து 259 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
1, 828 கிலோ கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 1,828 பேர் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புத் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அதிகூடிய தண்டனையாக மரண தண்டனையை விதிக்க முடியும். 582 மரண தண்டனை வழக்குகள் மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருவதுடன், 61 பேருக்கு இந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் மரணதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வலையமைப்பை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு முற்றாக ஒழித்துள்ளது. தொடர்ந்தும் போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை