கொழும்பில் ரணில் அதிக வாக்குகளைப் பெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தயார் – சுஜீவ

கொழும்பில் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தியைவிட அதிக வாக்குகளைப் பெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தயாராகவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில், “தேசிய சொத்துக்களை விற்று முடித்து, தற்போது கிரிகெட்டையும் நாட்டின் சிறந்த வீரர்களை அரசியல் நோக்கங்களுக்காக காட்டிக் கொடுக்கின்றனர்.

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் ஊழல் இடம்பெற்றுள்ளது என்பதை மஹிந்தானந்த அலுத்கமகே அறிந்திருந்தால் அதனை ஏன் அப்போதே வெளிப்படுத்தவில்லை?

இவ்வாறு ஒவ்வொரு பிரிவாக நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும். வாக்களிக்கும்போது மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியும் இதே நிலைமையிலேயே காணப்படுகிறது. அதனால்தான் 26 வருடங்கள் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் மக்களால் புறக்கணிக்கப்பட்டார்.

இம்முறை கொழும்பில் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தியைவிட அதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்டால் அல்லது தயா கமகே கூறியதைப் போன்று ஐக்கிய தேசியக் கட்சி 50 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்யத் தயாராகவுள்ளேன்” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.