வன்னியில் தயவுசெய்து இனவாதம் கக்காதீர்கள் – சக வேட்பாளர்களிடம் காதர் மஸ்தான் கோரிக்கை…

“தேர்தல் காலத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இனவாதம் கக்கபடுகின்றது. வன்னி மாவட்டத்தில் தயவுசெய்து இனவாதத்தைக் கக்க வேண்டாம்.”

– இவ்வாறு கோரிக்கை விடுத்தார் முன்னாள் பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசியல் பின்னணியோ, அனுபவமோ இல்லாமல் அரசியலுக்கு வந்தவனே நான். இறைவனின் உதவியுடன் பல வேலைத்திட்டங்களை இப்பகுதியில் செய்திருக்கின்றேன்.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தனிப்பெரும் ஆட்சியை நாம் அமைக்க இருக்கின்றோம். எனவே இன, மத பேதமில்லாமல் அபிவிருத்தி செய்யகூடியவர்களை நாங்கள் உருவாக்க வேண்டும்.

தற்போது அனைத்துப் பகுதிகளிலும் இனவாதம் கக்கப்படுகின்றது. வன்னி மாவட்டத்தில் தயவு செய்து இனவாதத்தைக் கக்க வேண்டாம் என்று சக வேட்பாளர்களைக் கேட்டுகொள்கின்றேன்.

எமது மக்கள் இனவாதிகள் அல்லர். ஆனால், தேர்தல் காலங்களில் அரசியலுக்காக அது உருவாக்கப்பட்டு கக்கப்படுகின்றது. அது மக்கள் மத்தியில் பல பிரச்சினைகளை இன்று உருவாக்குகின்றது.

இனவாதத்தை மாத்திரம் கக்கி வாக்குகளைப் பெற்று மக்களுக்குச் சேவை செய்வதைவிட அரசியலுக்கு வராமல் மக்களை நிம்மதியாக வாழவிடலாம் என்று நான் நினைக்கின்றேன்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த 06 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கீழ்த்தரமாக விமர்சித்தார்கள். எனினும், அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றார்.

பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற பின்னர் சஜித் பிரேமதாஸவைப் பிரதமராக்கப் போகின்றார்கள் என்று இந்தப் பகுதியில் அமைச்சராக இருந்தவர் சொல்கின்றார். இவர்கள் மக்களை மடையர்களாக நினைக்கிறார்கள். எனினும், மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்

இப்பகுதியில் போர் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்தும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் என்பது முற்றுப்பெறாமல் இருக்கின்றது. எனவே, இப்பகுதிக்கு ஏற்ற வகையில் பல வேலைத்திட்டங்களை அடையாளப்படுத்தி, அதனை ஐனாதிபதியிடம் வழங்கி அவற்றைச் செயற்படுத்த நாம் முயற்சிப்போம்.

இங்கு இருக்கும் குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும். எமக்கான அபிவிருத்திகளை அரசிலிருந்தே நாம் பெறவேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.