நவீன முறையில் பலம்பொருந்திய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவேன்- சஜித்

நவீன முறையில் போர் தளவாடங்கள் மற்றும் பயிற்சிகள் பொருந்திய பலம்மிக்க பாதுகாப்பு கட்டமைப்பை எதிர்காலத்தில் உருவாக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தாது அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், தேசிய பாதுப்பிற்கான வலிமை முப்படை மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரிடமே காணப்படுவதாகக் கூறியுள்ளார்.

பிற்றகோட்டே ஷோலிஸ் மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாடு முகங்கொடுத்துள்ள புதிய சவால்களை எதிர்கொள்வதற்கு புதிய பாதையை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தமது கொள்கை நேர்மையான தேசியவாதமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நேர்மையான தேசியவாத பயணத்திற்கான முதற்படியை வரும் தேர்தல் எனவும், இலங்கையில் சிங்கள, பௌத்தர்கள் அதிகம் என்பதால் பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பில் முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனுடன் ஏனைய இன, மதங்களை பாதுகாக்க வேண்டியது தேசிய பொறுப்பாகும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேர்மையான தேசியவாதம் என்ற தமது வேலைத் திட்டத்தின் கீழ் இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம், பயங்கரவாதம் என்பவற்றை முழுமையாக எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தேசப்பற்று, நாட்டையும் இனங்களையும் நேசிக்கும் தன்மை, வேறு எந்த இனம் அல்லது மதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் ஒன்றிணைந்த ஆட்சிக்குள் தேசிய பாதுகாப்பைப் பாதுகாத்து சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்துடன் நாட்டை பாதுகாக்கும் புதிய பாதையே நேர்மையான தேசியவாதம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், நேர்மையான தேசிய வாதத்துக்குள் வெறுக்கத்தக்க அரசியல், வெறுக்கத்தக்க பேச்சு என்பன முழுமையாக நிராகரிக்கப்படும் என்றும் அவ்வாறு செயற்படுவது சட்டவிரோத செயற்பாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டு அவற்றில் ஈடுபடுவோர் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய பாதுகாப்பில் முப்படையினர் பொலிஸாருடைய பாதுகாப்பு மாத்திரமல்லாது, நாடு என்ற அடிப்படையில் பொருளாதார பாதுகாப்பு, அரசியல் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு என்பவை தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.