கட்டாரில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் – வெளியான முக்கிய தகவல்

இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கட்டாரில் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் காதலன் மீது சந்தேகம் இருப்பதாக விமான நிலைய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் கட்டாரில் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவர்களின் சடலங்கள் நேற்று  நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் 59 வயதுடைய யோகநாதன் மகேந்திரன் என்பவரும் 55 வயதுடைய அவரது மனைவி ஷியாமலி யோகநாதன் மற்றும் 34 வயதுடைய அவர்களது மகள் சுதர்ஷனி யோகநாதன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், உயிரிழந்த 34 வயதுடைய பெண்ணுடன் தொழில் நிமித்தம் கட்டார் சென்ற நபரொருவர் காதல் வயப்பட்டிருந்ததாகவும் பின்னர் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் கூரிய ஆயுதத்தினால், தனது காதலி, அவரது தாய் மற்றும் தந்தையை கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட பின்னர் அந்த நபர் நாடு திரும்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட சுமார் நான்கு நாட்களுக்கு பின்னர் சடலங்கள் மீட்கப்பட்டன என்றும் மேலும் கொரோனா தொற்று நோய் காரணமாக சடலங்களை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கு நான்கு மாதங்கள் ஆகிவிட்டன என்றும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது சகோதரியின் காதலன் மீது சந்தேகம் இருப்பதாக விமான நிலைய பொலிஸில் உயிரிழந்த பெண்ணின் சகோதரி முறைப்பாடு செய்துள்ளார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேக நபரைக் கண்டுபிடிக்க விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.