மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வல்லமை எமது அணிக்கே இருக்கின்றது – வேலுகுமார்

மலையக  தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டகையோடு கிடைத்திருக்கவேண்டிய உரிமைகளைக்கூட தமிழ் முற்போக்கு கூட்டணியே கடந்த நான்வரை வருடங்களில் பெற்றுக்கொடுத்தது. எனவே, மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வல்லமையும், பேரம் பேசும் ஆற்றலும் எமது அணிக்கே இருக்கின்றது. வாக்குரிமை மூலம் அதனை மக்கள் மேலும் பலப்படுத்தவேண்டும்.”  என  ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.
பாத்ததும்பர தேர்தல் தொகுதியில்   நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வேலுகுமார் மேற்கண்டவாறு கூறினார்.அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ” மலையக  மக்களுக்காக தமிழ் முற்போக்கு கூட்டணி எதனையுமே செய்யவில்லை என்றும், கண்டி மாவட்டத்தில்கூட அபிவிருத்திகள் இடம்பெறவில்லை என்றும் பருவகால வேட்பாளர்களும், அரசாங்கத்தின் கைக்கூலிகளும் மக்கள் மத்தியில் போலிப்பிரச்சாரத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

அதுவும் என்னால் நிர்மாணிக்கப்பட்ட பாலத்தின்மீது நின்றபடி, எனது முயற்சியால் நிர்மாணிக்கப்பட்ட தனிவீடுகளை பார்த்தப்படியே எதுவுமே நடக்கவில்லை என வாய்க்கூசாமல் பொய்யுரைக்கின்றனர். கண்டி மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை பட்டியலிட்டுக்காட்டி நான் உரிமையுடன் வாக்கு கேட்கின்றேன்.என்னை விமர்சித்து வாக்கு கேட்பதே சிலரின் பிரச்சார வியூகமாக இருக்கின்றது. இன்று புள்ளபூச்சிகளுக்கும் கொடுக்கு முளைத்துள்ளன. பொட்டகோழிகூவி பொழுது விடியுமா என்ன? எனவே, எப்படிதான் விமர்சித்தாலும் எனக்கான மக்கள் ஆதரவை தடுக்கமுடியாது. மக்கள் சக்தி என்னுடனேயே இருக்கின்றது.

எமது மக்களுக்கு குடியுரிமை கிடைத்தகையோடு போராடியேனும் நிலவுரிமை, வீட்டுரிமை, கல்வி உரிமை, சுகாதார உரிமை, சம்பள உரிமை உட்பட மேலும் பல உரிமைகளை பெற்றிருக்கவேண்டும். ஆனால் அதற்கான தலைமைத்துவத்தை எந்த அரசாங்கம் வந்தாலும் அமைச்சுப் பதவிகளில் இருப்பவர்கள் வழங்கினார்களா? இல்லை. குடியுரிமை கிடைத்துவிட்டது, அதை வாங்கிக்கொடுத்தது நாம்தான் எனக்கூவி கூவியே வாக்குவேட்டை நடத்தினர்.

அதுமட்டுமல்ல மலையகத் தமிழர்களை வாக்களிப்பு இயந்திரமாக பயன்படுத்தும் ஆட்சியாளர்களின் முயற்சிக்கும் துணைபோனார்கள்.குடியுரிமை கிடைக்கப்பெற்ற பின்னர் மலையக மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கியவர்கள் தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் செயற்பட்டிருந்தால் பல்வேறு உரிமைகளை முன்பே பெற்றிருக்கலாம். ஆனால், அமைச்சுப் பதவிகள் மட்டுமே அவர்களின் குறியாக இருந்தது.

தமிழ் முற்போக்கு கூட்டணி உதயமாகிய பின்னரே மலையகத் தமிழர்களுக்கு உரிமை அரசியலையும் முழுமையாக அனுபவிக்ககூடிய சூழ்நிலை உதயமாகியுள்ளது. நிலவுரிமை, வீட்டுரிமை ஆகியவற்றை பெற்றுக்கொடுத்துள்ளோம்

அத்துடன், அரசாங்க நிதியை தோட்டப்பகுதி அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கு தடையாக இருந்த பிரதேச சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டோம். மலையகத்துக்கென தனியானதொரு அதிகார சபையையும் உருவாக்கியுள்ளோம். கண்டி மாவட்டத்திலும் தமிழர்களுக்காக உரிமை அரசியலும், அபிவிருத்தி அரசியலும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட்டது. இப்படி எமது சாதனைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

எனவே, மலையகத்தில் சமூகமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே இருக்கின்றது. அந்த கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தே பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றது. அந்த கூட்டணியை தமிழ் மக்கள் வெற்றிபெறவைக்கவேண்டும்.” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.