மன்னாரில் 7 மீனவர்கள் சுயதனிமைப்படுத்தல்: மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை- வினோதன்

மன்னார்- வங்காலை கிராமத்தில் 7 மீனவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லையென மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் ரி.வினோதன் மேலும் கூறியுள்ளதாவது, “வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி வந்த கைதி ஒருவர் மன்னார்- உப்புக்குளம் கிராமத்திலுள்ள அவரது வீட்டிற்கு வருகை தந்திருந்தார்.

இதேவேளை வெலிக்கடை சிறைச்சாலையில் பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டதில் கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் காணப்பட்ட நிலையில், ஒரு கிழமைக்கு முன் விடுவிக்கப்பட்ட 40 கைதிகளை இலங்கை முழுவதும் மீள சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய விடுவிக்கப்பட்ட நிலையில்,  உப்புக்குளம் பகுதிக்கு தனது வீட்டிற்கு வந்த நபரும் கடந்த வியாழக்கிழமை இரவு, மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

குறித்த நபர் மன்னார் உப்புக்குளத்தில் கடந்த ஒரு வாரம் தங்கி இருந்த நிலையில் இவருடைய குடும்பத்தினரும், அவர்களோடு நெருங்கிய தொடர்பை பேணிய ஏனைய இரண்டு குடும்பங்கள் உள்ளடங்களாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 14 பேர்கள் தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த அனைவரும், நேற்று முதல் எதிர்வரும் 14 தினங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் 14 நாட்களின் பின்னர் மீண்டும் சமூகத்துடன் இணைக்கப்படுவார்கள்.

அத்துடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவரின் பி.சீ.ஆர் பரிசோதனை அறிக்கையினை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

மேலும் மன்னார்- வங்காலை பகுதியில் 7 மீனவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடலில் இந்திய மீனவர் ஒருவரின் டோலர் படகு பழுதடைந்த காரணத்தினால், குறித்த 7 மீனவர்களும் கடலில் இந்திய மீனவர்களுக்கு உதவிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில்   வங்காலை கிராமத்தைச் சேர்ந்த குறித்த 7 மீனவர்களும் அடையாளம் காணப்பட்டு அவர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகளையும் எதிர்பார்த்துள்ளோம். மன்னார் மாவட்டத்தில் இதுவரை எந்ததொரு தொற்று நோயாளரும் கண்டு பிடிக்கப்படவில்லை.

எனவே இந்த விடயம் தொடர்பாக மக்கள் அச்சம் கொள்ளவேண்டிய அவசியமில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.