புலிகளுடன் தொடர்புடையதாக வெளிநாட்டு அமைப்புகள், தனிநபர்களுக்குத் தடை- வெளியான தகவல்

ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் (UNSC) 1,373 என்ற தீர்மானத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் சில வெளிநாட்டு அமைப்புகளையும் தனிநபர்களையும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை நியூஸ் இன் ஏசியா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட சிலர் உட்பட கரும்புலிகள் வரிசையில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என அரசாங்கத்திற்கு நெருக்கமான பயங்கரவாதம் குறித்த இலங்கை நிபுணர் ஒருவரை மேற்கோள்காட்டி பி.கே.பாலசந்திரன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2014, ஏப்ரல் முதலாம் திகதி அப்போதிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசாங்கம், ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் (UNSC) 1373 என்ற தீர்மானத்தின் கீழ் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாக பதினாறு அமைப்புகளையும் தனிநபர்களையும் தடை செய்வதாக அறிவித்தது.

அப்போதிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பயங்கரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள், தமிழ் மறுவாழ்வு அமைப்பு, தமிழ் ஒருங்கிணைப்புக் குழு, பிரித்தானிய தமிழ் மன்றம், உலக தமிழர் இயக்கம், கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழ் மன்றம், கனேடிய தமிழர்களின் தேசிய சபை, தமிழ் தேசிய சபை, தமிழ் இளைஞர் அமைப்பு, உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழு, தமிழீழ நாடுகடந்த அரசு, தமிழீழ மக்கள் கூட்டம், உலக தமிழ் நிவாரண நிதி மற்றும் தலைமையக குழு ஆகிய அமைப்புக்கள் பட்டியலிடப்பட்டன.

அத்துடன், தனிநபர்களாக, பெரின்பநாயகம் சிவபரன் அல்லது நெடியவன், ரெவ். Fr.S.J.Emmanuel, விஸ்வநாதன் உருத்திரகுமாரன், சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி அல்லது விநாயகம் உட்பட 424 பேர் பயங்கரவாதிகள் என பட்டியலிடப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, கடந்த 2015, மார்ச்-19இல் ஒரு இன நல்லிணக்க செயற்பாட்டின் ஒரு பகுதியாக 16 குழுக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தமிழ் நபர்களை குறித்த பட்டியலில் இருந்து அகற்றும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்ததாக A.F.B. அறிக்கை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள முன்னாள் போராளிகளை கண்காணிப்பதற்காக அப்போதைய மஹிந்த அரசாங்கம் ஏற்படுத்திய பொறிமுறைகளை நல்லாட்சி அரசாங்கம் செயலிழக்கச்செய்தது என பயங்கரவாத விவகாரங்களுக்கான நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், யுத்தம் முடிவடைந்த பின்னர் பத்திற்கும் மேற்பட்ட பயங்கரவாத முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பை இராணுவத்தினர் அழித்தபோதிலும் அந்த அமைப்பின் கப்பல் வர்த்தக மற்றும் அரசியல் வலையமைப்புகள் தொடர்ந்தும் இயங்குவதாக நிபுணர் கூறியுள்ளார்.

உலகின் பல பகுதிகளிலும் அவை இயங்குகின்றன எனவும் தமிழ்நாடு, கனடா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எந்த தடையுமின்றி கரும்புலிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக தடைவிதிப்பதுடன் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு கிழக்கில் செயலிழக்கச் செய்யப்பட்ட பாதுகாப்பு பொறிமுறையை கோட்டாபய அரசாங்கம் மீண்டும் ஏற்படுத்தவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, படையினரை விவசாயம், கட்டுமானம் உட்பட ஏனைய கிராமிய மட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களை மக்களுக்கு நெருக்கமானவர்களாக்க வேண்டும் என்றும் அந்த நிபுணர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.