பொதுத்தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கவா சஜித் முற்படுகிறார்: உதயகம்மன்பில கேள்வி

கொரோனா வைரஸின் தாக்கம் இரண்டு வருடங்களுக்கு இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத்தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கவா சஜித் பிரேமதாச முற்படுகிறார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். உதயகம்மன்பில மேலும் கூறியுள்ளதாவது, “சஜித் பிரேமதாச மீண்டும், பொதுத்தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கத்திடமும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், தேர்தலை பிற்போட அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ எந்தவொரு அதிகாரமும் கிடையாது என்பதை நாம் அவரிடம் கூற விரும்புகிறோம்.

இந்த அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மட்டும்தான் இருக்கிறது. ஆணைக்குழுவும் சஜித் பிரேமதாசவின் கோரிக்கைக்கு இணங்க, இரண்டு தடவைகள் பொதுத் தேர்தலை ஒத்திவைத்தன.

அந்தவகையில், ஏப்ரலில் 25 நடக்க வேண்டிய தேர்தலை ஜுன் 20 ஆம் திகதியும், ஜுன் 20 ஆம் திகதி நடக்கவிருந்த தேர்தலை ஒகஸ்ட் 5 ஆம் திகதியும் ஆணைக்குழு பிற்போட்டது.

ஏப்ரல் 30 ஆம் திகதி முதல், ஜுலை 9 ஆம் திகதிவரையான 70 நாட்களில், இலங்கையில் சமூக ரீதியாக கொரேனா பரவவில்லை.
இந்த நிலையில், ஜுன் 20 ஆம் திகதியே பொதுத்தேர்தலை நடத்தியிருந்தால், இதனைவிட அச்சமில்லாத சூழலில் மக்கள் வாக்களிக்க வருகைத் தந்திருப்பார்கள்.

எதிர்க்காலத்தில் கொரோனா பரவல் அதிகரிக்குமா, குறைவடையுமா என்பதை எவராலும் கூறமுடியா நிலைமையே தற்போது காணப்படுகிறது.

சஜித் பிரேமதாசவுக்கு இதுதொடர்பாக வாக்குறுதி வழங்கவும் முடியாது. உலக சுகாதார ஸ்தாபனம் கூறுவதற்கு இணங்க இன்னும் 2 வருடங்களுக்கேனும் கொரோனாவுடன் வாழவேண்டிய நிலைமை இருக்கும் என்று கூறியுள்ளது.

அப்படியானால், இரண்டு வருடங்களுக்கு பொதுத்தேர்தலை பிற்போடவா, சஜித் பிரேமதாச முயற்சிக்கிறார் என்று கேட்கவிரும்புகிறோம்.

எனவே, பொதுத்தேர்தலை உரிய திகதியில் நடத்த வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.