அரசு புகழ் பாடும் கருணாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஒருதுண்டு காணியைக்கூட மீட்க முடியுமா-கலையரசன் கேள்வி

அரசு புகழ் பாடும் கருணாவால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட ஒரு காணியை மீட்க முடியுமா என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் தவராசா கலையரசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட கோமாரி கிராமத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கெள்வியெழுப்பினார்.

அவர் கூறுகையில், “ஒட்டுமொத்த தமிழர்களையும் நசுக்கும் நடவடிக்கையை சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது.

அரசியல் ரீதியாக பலமாக உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை உடைப்பதற்காக திட்டமிட்டு எமது மக்களை ஒரு குழப்பகரமான சூழ்நிலைக்குள் இட்டுச்செல்ல வேண்டும் என்ற நோக்கோடும் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது.

தமிழர்களின் போராட்டத்தை நசுக்குவதற்கு யாரை பயன்படுத்தியதோ அவரைத்தான் தற்போது அம்பாறை மாவட்டத்தில் இந்த அரசாங்கம் களமிறக்கி இருக்கிறது.

அம்பாறையை காப்பாற்றப்போவதாக சூளுரைக்கும் அவர் தன்னை காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கின்றார். அவருடைய வாக்கினைக்கூட அவரால் அம்பாறை மாவட்டத்தில் வழங்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.

அம்பாறையில் தமிழர்களின் நிலை இரண்டு சமூகத்தின் நெருக்கடிக்கு உட்பட்டது. கருணாவுடன் இணைந்து போராடி மரணித்த மாவீரர்களின் துயிலும் இல்லங்களை அரச படைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து கூட காப்பாற்ற முடியாத ஒருவரால் எவ்வாறு எமது மக்களைக் காப்பாற்ற முடியும்?

அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட போதும் நாங்கள்தான் அவ்விடத்திற்குச் சென்று தடுத்து நிறுத்தினோம். அரச படைகள் திட்டமிட்டு ஆக்கிரமிப்புச் செய்யும் வேலைகளை எல்லாம் பாராட்டி புகழ்ந்து பேசிவந்த கருணாவால் சிறிய ஒரு காணித் துண்டையாவது அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுக் கொடுக்கமுடியுமா” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.