தமிழீழம் என்பது தமிழ் மாநிலம் என்கின்ற வகையில் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்- துரைராஜசிங்கம்

தமிழீழம் என்பது தமிழ் மாநிலம் என்கின்ற வகையில் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

‘வடக்கு கிழக்கு மாநிலம் தமிழர்களின் தாயகம் என்ற வகையிலே அவர்கள் தங்கள் மாநிலத்திற்கு தமிழீழம் என்று பெயர் சூட்டுவதில் எவ்வித முரண்பாடோ தடையோ கிடையாது’ என வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளதாகத் தெரிவித்த அவர் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

 

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் விடுதலையை முன்கொண்டு செல்கின்ற ஒரு கட்சியாக இருக்கின்றது.  ஜனநாயகப் போராளிகளின் ஆதரவு, அனுசரணை என்பது தொடர்ந்து அந்த விடுதலைப் பயணத்தை ஜனநாயக வழியிலே மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருப்பது மகிழ்வளிக்கிறது.

எழுபதுகளில் தென்னிலங்கையில் இளைஞர் குழு ஆயுதமேந்திப் போராடியது. அது ஈவிரக்கமின்றி அடக்கப்பட்டது. பின்னர் எண்பதுகளில் அது மீளுயிர்ப்புக் கொண்டது. அதனையும் இலங்கை அரசாங்கம் தன் இரும்புக் கரம் கொண்டு அடக்கியது.

காலவோட்டத்திலே அவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துவிட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அவ்வாறு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த ஜனதா விமுக்தி பெரமுன என்ற கட்சி எந்தவித இடைஞ்சல்களுமின்றி தன்னுடைய அரசியல் பயணத்தை அந்தந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து அல்லது தனித்து செயற்படுத்திக்கொண்டு வருகின்றது.

ஆனால், ஜனநாயகப் போராளிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குக் கொடுக்கின்ற ஆதரவை வேறொரு சாயம் பூசி அவர்களை ஓரங்கட்டி, எங்களை வேறுவித சட்ட நடவடிக்கைகளுக்குள்ளே இழுக்கும் வகையில் தென்னகத்தில் இருந்து பல கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

போராளிகள் ஜனநாயக நீரோட்டத்திற்கு வருகின்றபோது அவர்கள் உரிய கௌரவத்தோடு வரவேற்கப்படுவதும், ஜனநாயகக் கட்சியோடு அவர்கள் இணைந்து செயற்படும்போது அதே கௌரவம் வழங்கப்படுவதும் உலக நாட்டுச் சரித்திரங்கள் எமக்கு எடுத்துச் சொல்லுகின்ற பாடங்கள். இவை புதிய விடயங்கள் அல்ல.

அந்த வகையிலே ஜனநாயகப் போராளிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து இந்த விடுதலைத் தீபத்தை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

அடக்கப்பட்ட ஒரு இனம் தன்னுடைய விடுதலைப் பாதையினை வெவ்வேறு விதமாக அமைத்துக் கொண்டாலும் இலட்சியம் ஒன்றாகத்தான் இருக்கின்றது.

தமிழீழம் தொடர்பாக வாசுதேவ நாணயக்கார ஒருமுறை குறிப்பிடுகின்போது ‘வடக்கு கிழக்கு மாநிலம் தமிழர்களின் தாயகம் என்ற வகையிலே அவர்கள் தங்கள் மாநிலத்திற்கு தமிழீழம் என்று பெயர் சூட்டுவதிலே எவ்விவித முரண்பாடும், தடையும் கிடையது’ என்று சொல்லியிருந்தார்.

அவர் அந்த விடயத்தைத் தற்போது மறுக்க முடியும். ஆனால் தமிழீழம் என்பது தமிழ் மாநிலம் என்ற வகையிலே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அத்தகைய, தமிழீழத்தை நோக்கியே எமது செயற்பாடு நடைபெறுகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.