தமிழ் மக்களின் இருப்பை தக்கவைக்கவும் பாதுகாக்கவும் கூட்டமைப்பை பலப்படுத்துங்கள்- ஆர்னோல்ட்

தமிழ் மக்களின் இருப்பை தக்கவைக்கவும் பாதுகாக்கவும் கூட்டமைப்பை பலப்படுத்துங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில், “எமது மக்கள் தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினையே ஆதரித்து தமது ஏகோபித்த ஆதரவை வழங்கி வந்திருக்கின்றார்கள்.

நாம் தற்பொழுது நாட்டில் உள்ள அரசியல் நிலைமைகளை அவதானிக்கின்ற பொழுது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

கடந்த நாடாளுமன்ற காலத்தில் மக்கள் நலன் சார் பல்வேறு விடயங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்திருக்கின்றது. அதன் தொடராக எமது நீண்டகால கோரிக்கையான நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை முன்னர் பலப்படுத்தியதைப் போன்று மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியான பயணத்தை முன்னெடுப்பதற்கு மக்கள் மீண்டும் தமது ஆதரவை வழங்க வேண்டும். அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர் பலத்துடன் கூட்டமைப்பு செல்கின்ற பொழுதுதான் எம்மால் பேரம் பேச முடியும். எமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்த முடியும்.

தென்னிலங்கையில் கூட்டமைப்பிற்கு எதிராகவே பேசப்படுகின்றது. தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக வடக்கு கிழக்கில் அரசாங்கத்தின் முகவர்களாக களமிறக்கப்பட்டிருப்பவர்களும் அதனையே மேற்கொண்டு வருகின்றனர். இது எமது மக்களின் எதிர்காலத்தை பாதிக்க வழிவகுக்கும்.

எனவே, தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தின் பாதையில் மக்கள் நலன் சார்ந்து தொடர்ச்சியாக செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழமை போன்று இம்முறையும் தமது வாக்குகளை வழங்கி தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதை நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் சொல்ல வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். அதுவே தமிழ் மக்களின் இருப்பை தக்கவைப்பதற்கும், பாதுகாப்பதற்கும் உரிய ஒரே ஒரு தெரிவாகும்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.