மனோ கணேசனை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டியது தமிழர்களின் கடமை – ஸ்ரீதரன்

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டியது கொழும்பு மாவட்ட தமிழர்களின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளில் தமிழர்கள் செறிந்து வாழ்வதால், அவர்கள் தமிழ்க் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் வேட்பாளர்களுக்கே வாக்களிப்பார்கள்.

ஆனால், கொழும்பு மாவட்ட நிலைவரம் அவ்வாறானது அல்ல. இதற்கு நேர்மாறானது. காரணம் இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களும் வாழுகின்ற மாவட்டம். அங்கு வசிக்கின்ற சிங்கள மக்கள், சிங்கள தேசியக் கட்சிகளுக்கே தமது வாக்குக்களை வழங்குவார்கள்.

ஆகவே அங்கு இருக்கின்ற தமிழர்கள் தமது வாக்குகளை சிதறடிக்காது தமது விருப்பு வாக்குகளை மனோ கணேசனுக்கு வழங்கி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த ஆணையைவிட பல மடங்கான ஆணையை வழங்கவேண்டிய கடமை உள்ளது.

இந்த ஜனநாயகக் கடமையை இந்த காலத்தின் கட்டளையை கொழும்பு மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் நிறைவேற்றுவார்கள் என நம்புகின்றேன்.

இலங்லையில் உள்ள தமிழர்கள் பாதிப்பிற்கு உள்ளாகும்போது அல்லது அவர்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது குரல் கொடுக்கின்ற ஒரு மனிதநேய வாதியாகவே மனோகணேசனை பார்க்கின்றேன்.

தமிழ்ர்தரப்பு நியாயங்களையும் சிங்கள பேரினவாத அரசின் போலிப் பிரசாரங்களையும் தகர்த்து அதன் உண்மைத் தன்மைகளை சிங்கள மக்களுக்கு வழங்கக் கூடிய பேச்சாற்றல் மற்றும் மொழியாற்றல் உள்ள தமிழ் அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.

ஆகவே இவ்வாறானவர்கள் என்றுமே தவிர்க்கப்பட முடியாதவர்கள் என்ற உண்மையை கொழும்பு மாவட்ட தமிழர்கள் புரிந்துகொண்டு, அவரை மீண்டும் நாடாளுமன்றம் அனுப்புவதற்கு செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்

மேலும் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நாடு ஒரு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளதனை அனைவரும் அறிகின்றோம்.

இந்த நிலையில் தமிழர்களின் இருப்பை தக்கவைக்க தமிழர்கள் தங்களின் அடையாளங்களுடன் வாழ அனைத்துப் பகுதிகளிலும் தமிழர் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட நலன்களுக்காக செயற்படுகின்ற தமிழ் அரசியற் கட்சிகள் மற்றும் தமிழர்கள் ஒன்றாக பயணிக்க வேண்டிய சந்தர்ப்பத்தை காலம் உருவாக்கி உள்ளது காலத்தின் கட்டளையை ஏற்று ஒரே திசையில் ஒரு இலக்கு நோக்கி பயணிக்க தயாராவோம்” என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.