தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதே அரசாங்கத்தின் திட்டம் – ஆனல்ட்

தமிழ் மக்கள் தமது வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாத்திரமே வழங்க வேண்டும். அதுவே தமிழ் தமிழ் இனத்தின் விடிவிற்கு வழிவகுக்கும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் இம்மானுவல் ஆனல்ட் தெரிவித்துள்ளார்.

புத்தூர் ஆவரங்கால் பகுதியில்   நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது  கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்  “ எம் இனத்தை கூறுபோடுவதற்காக ஒரு புறம் சிங்களக் கட்சிகளின் ஊடாக பல்வேறு முகவர்கள்; அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்ற மாயையை காட்டிக் கொண்டு வாக்கு கேட்கின்றனர்.

மறு பக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அற்ப சொற்ப விடயங்களுக்காக பிரிந்து சென்று போலித் தேசியத்தை பேசிக்கொண்டு தம்மை தமிழ்த் தேசிய வாதிகளாக காண்பித்துக் கொண்டு வாக்கு கேட்டு வருகின்றார்கள். இவர்கள் இரண்டு தரப்பினர் தொடர்பிலும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

எனவே சிங்களக் கட்சிகளுக்கு எமது பகுதிகளில் துளியும் இடம் இல்லை என்பதை தமிழ் மக்கள் தமது வாக்குகளால் காண்பிக்க வேண்டும். சிங்களக் கட்சிகளை மக்கள் இம்முறை முற்றாக நிராகரிக்க வேண்டும்.

அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று புதிய புதிய கட்சிகளை ஆரம்பித்து பின்னர் தற்போது தம்மை தமிழ்த் தேசியவாதிகளாக காண்பித்து வாக்கு கேட்போர்கள். இவர்களும் மறைமுகமாக சிங்கள அரசின் எதிர்பார்ப்பை நிறைவு செய்பவர்களாகவே செயற்படுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதே இவர்களின் முழு எண்ணம். அதுவே சிங்கள அரசினதும், சிங்கள கட்சிகளினதும் அவாவாகும். எனவே இவ்விரு குழுக்கள் தொடர்பிலும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற எந்தக் கட்சியினாலும் அதிகளவான ஆசனங்களைப் பெற முடியாது. வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பலம் பொருந்திய கட்சியாகும். இதை யாரும் மறுக்க முடியாது.

எனவே தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் மக்கள் (வாக்காளர்கள்) சிங்கள கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்த உதிரிகள் எவருக்கும் வாக்களிக்காமல் அவர்களை முற்றாக நிராகரித்து தமிழ்த் தேசிய பாதையில் இன்றும் தடமாறாது பயணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு மாத்திரம் வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.