மக்கள் மதிநுட்பத்துடன் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் – வேலுகுமார்

மக்கள் மதிநுட்பத்துடன் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் முற்போக்கு கூட்டணி ஆளுங்கட்சியின் பங்காளியாக இருந்தபோதிலும் ஒருபோதும் சலுகைகளுக்கு அடிபணிந்து தலையாட்டும் அரசியலை நடத்தியதில்லை.

ஆளுங்கட்சிக்குள் இருந்துகொண்டே போராடியது. அதன்காரணமாகவே அபிவிருத்தி மற்றும் உரிமை அரசியலை சமாந்தரமாக முன்னெடுக்கக்கூடியதாக இருந்தது.

பல தசாப்தங்களாக செய்துமுடிக்க முடியாமல்போன திட்டங்களைக்கூட வெற்றிகரமாக முன்னெடுத்து பெருந்தோட்டப் பகுதிகளையும் அரச நிர்வாகப் பொறிமுறைக்குள் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனவே, 2015ஆம் ஆண்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம், அவர்கள் எதிர்பார்த்தவற்றை எம்மால் முடிந்தளவு நிறைவேற்றக்கூடியதாக இருந்தது.

மேலும் சில திட்டங்களுக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகள் கிடைத்தால் நிச்சயம் அவற்றையும் செய்துமுடிப்போம். இது மக்களுக்கும் தெரியும். அதனால்தான் எம்மால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களில் பங்கேற்று பேராதரவை வழங்கி வருகின்றனர்.

அதேவேளை, தமிழ் பேசும் மக்களின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற தேர்தல் இதுவாகும். இத்தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையில் நாம் வெற்றிபெறுவோம் என்பது உறுதி.

சிலவேளை, நிலைமை மாறினால்கூட நாம் நாடாளுமன்றத்தில் பலமாக இருக்கவேண்டும். அப்போதுதான் எமது இருப்பையும் தமிழ் பேசும் சமூகத்துக்கு எதிரான பிரேரணைகளையும் தடுக்கக்கூடியதாக இருக்கும்.

எனவே, தனிநபர்களை தெரிவுசெய்து நாடாளுமன்றம் அனுப்பும் தேர்தலாக அல்லாமல் சமூகத்தின் இருப்பை, எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் தேர்தல் என்பதால் மக்கள் மதிநுட்பத்துடன் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.