நாட்டு மக்கள் மீது இரக்கமுள்ள அரசாங்கத்தை உருவாக்குவேன்: நம்பிக்கை கொள்ளுங்கள்- சஜித்

நாட்டு மக்களின் இன்ப, துன்பங்கள் தொடர்பாக அக்கறைகொண்ட இரக்கம் மிக்க அரசாங்கத்தை உருவாக்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரமதாசவின் புதவல்வனான தான், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகவும், தன்மீது நம்பிக்கை கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பு -15இல் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் எந்த நிவாரணமும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாளாந்தம் ஊதியம் பெறுபவர்கள், நிரந்தர வருமானம் இன்றி இருப்பவர்கள், வாழ்வாதார பிரச்சினையை எதிர்நோக்கி வரும் சாதாரண மக்கள் என அனைவரும் தங்களது பொருளாதாரத்தை சீர்செய்து கொள்வதற்காக மாதத்திற்கு 20ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொடுப்போம்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த காலக்கட்டத்தில் அதிகமான மின்பாவனையினால், அதிகரிக்கப்பட்ட மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான மின் கட்டணங்களை செலுத்தியவர்களின் கட்டணத்தொகையை எமது ஆட்சியில் மீளப் பெற்றுக்கொடுப்போம். அதுமட்டுமன்றி நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றி 24 மணித்தியாலயத்திற்குள் எரிபொருளின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுப்போம்.

தொடர்மாடிக் குடியிருப்புகளில் வாழ்ந்துவரும் மக்களின் வீட்டு உரிமைப்பத்திரம் தொடர்பாகவும் அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதுடன் அனைவருக்கும் உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக் கொடுப்போம்.

சஜித் பிரேமதாசவின் வாக்குறுதிகள் மீது சந்தேகம் கொள்ளாதீர்கள். நான் கட்டாயம் எனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். நான் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மகன் என்றவகையில் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இதுவரையிலும் இல்லாத சாதாரண மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அறிந்து, அவர்கள் மீது இரக்கத்துடன் செயற்படக்கூடிய அரசாங்கத்தை நான் உருவாக்குவேன்” என்று குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.