மத்திய மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் தொண்டாவின் மகள்

மாகாணச் சபைத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில், மத்திய மாகாணத்தில் அறுவர் களமிறங்கவுள்ளனர் என்றும், அவர்களில் இருவர் பெண்கள் என்றும் அக்கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்தன.

நாடாளுமன்றத் தேர்தலில் இ.தொ.காவின் சார்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களை, மீண்டும் தேர்தலில் களமிறக்குவதா என்பது தொடர்பில் ஆராயப்படுகின்றது.

அத்துடன், இ.தொ.காவின் முன்னாள் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வியான விஜயலக்‌ஸ்மி மற்றும் இ.தொ.காவின் முக்கியஸ்தர் ஒருவரின் புதல்வியும் இம்முறைத் தேர்தலில் களமிறங்கவுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை, ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஊவா மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் களமிறங்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சிரார்த்த தின நிகழ்வின் பின்னர், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தெரிவும் இடம்பெறவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.