நேற்று யாழ் கிட்டு பூங்காவில் போராட்டம்!!!!!!!!!!(PHOTOS)

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களான பிறிதொரு தகுதியினரின் ஏற்பாட்டில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமான நேற்று (30) காலை 11 மணியளவில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவிலிருந்து போராட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இங்கு பேரணிக்கு முன்னதாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டி போராடும் போது உயிரிழந்த தாய் மற்றும் தந்தையருக்கு ஈகைச் சுடரேற்றி மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

குறித்த பேரணியானது யாழ்ப்பாணம் நல்லூர் – கிட்டுப் பூங்காவில் இருந்து ஆரம்பமாகி முத்திரைச்சந்தியை அடைந்து அங்கிருந்து நல்லூர் ஆலயத்தை அடைந்து கோவில் வீதியூடாக நாவலர் வீதியை அடைந்து பின் ஐநாவின் வதிவிட அலுவலகத்தை சென்றடைந்தது.

இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணையே வேண்டும், உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை இல்லை, ஐநாவே தலையிடு, எங்கே எங்கே உறவுகள் எங்கே?, ஐநா அமைதிப்படை வரவேண்டும், தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோஷங்கள் உறவுகளால் எழுப்பப்பட்டது.

அங்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக் கூறல் மற்றும் நீதிக்கான அவசர தேவை கருதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தினூடாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக்கு அறிக்கையொன்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் தமி்ழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்பிகள் இருவர் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை வடக்கின் பிரதான போராட்டமான மாபெரும் பேரணி யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.