சர்வாதிகாரத்தை நிலைநாட்டவே ’19’ ஐ இல்லாதொழிக்கிறது அரசு மக்களை அணிதிரட்டி எதிர்ப்போம் என்கிறார் – அநுரகுமார திஸாநாயக்க!!

“நாட்டில் சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்டவே அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க ராஜபக்ச அரசு முயற்சிக்கின்றது.”

– இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“19ஆவது திருத்தத்தை நீக்க நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அந்தத் திருத்தச் சட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

கடந்த ஆட்சியில் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை நாட்டின் ஜனநாயகத்துக்கும் மக்களின் உரிமைக்கும் கிடைத்த பாரிய வெற்றியாகும்.

ராஜபக்சக்களின் ஏகாதிபத்தியத்துக்கு வழிவகுத்த 18ஆவது திருத்தத்தை 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம் இல்லாதொழித்தோம்.

18ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட வரையறையில்லாத அதிகாரங்களை 19ஆவது திருத்தத்தின் மூலம் குறைத்தோம்.

தற்போது ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் கோட்டாபய ராஜபக்ச தனக்கான அதிகாரங்களைப் பெருக்கிக்கொள்ள 19ஆவது திருத்தத்துக்கு முடிவுகட்டத் தீர்மானித்துள்ளார். இதற்கு அவரின் சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளார். எனவே, ராஜபக்ச சகோதரர்களுக்காக 19ஆவது திருத்தத்தை நீக்க இடமளிக்கமாட்டோம். மக்களை அணிதிரட்டிப் போராடுவோம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.