நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அமரதாஸ ஆனந்த தெரிவு!!!

பாறுக் ஷிஹான்

நாவிதன்வெளி பிரதேச  சபையின் புதிய தவிசாளராக  சுயேட்சை குழு உறுப்பினரான அமரதாஸ ஆனந்த   தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்திருந்த நிலையில்  அப்பதவி வெற்றிடமானதையடுத்து புதிய  தவிசாளரை  தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்று புதன்கிழமை (02) பதில் தவிசாளர்   ஏ.கே அப்துல் சமட்  தலைமையில் பிரதேச சபை சபா மண்டபத்தில்  நடைபெற்றது.

இதன்போது புதிய தவிசாளர்  தெரிவு செய்வதற்கான தேர்தலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.மணிவண்ணன் நடாத்திவைத்தார்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற  இவ் அமர்வில் தேர்தலுக்கான வேட்பாளர்களை முன்மொழியுமாறு அவர் சபையைக் கோரியபோது  இருவரின் பெயர்கள் தவிசாளருக்காக பிரேரிக்கப்பட்டது. சிறி லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரும் பதில் தவிசாளருமான  ஏ.கே. அப்துல் சமட்     சுயேட்சை குழு உறுப்பினரான அமரதாஸ ஆனந்தவின்  பெயரை பிரேரித்தார். அதனை சுயேட்சை குழு உறுப்பினர் தி. யோகநாயகன்  ஆமோதித்தார். இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக அந்தோனி சுதர்சனை அக்கட்சி உறுப்பினர் முத்துக்குமார் விக்னேஸ்வரன் பிரேரிக்க அதே கட்சியை சேர்ந்த மற்றுமொரு உறுப்பினரான மு.நிரோஜன் வழி மொழிந்த நிலையில்   வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.இதனடிப்படையில் வெளிப்படையிலான வாக்கெடுப்பு இடம்பெற்ற போது தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட சுயேட்சை குழு உறுப்பினரான அமரதாஸ ஆனந்தவிற்கு  ஆதரவாக 07 வாக்குகளும்  மற்றையவரான தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக அந்தோனி சுதர்சனுக்கு  06 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதன் போது 13 பேர் கொண்ட நாவிதன்வெளி பிரதேச சபையில் வாக்களிப்பு அடிப்படையில் சுயேட்சை குழு உறுப்பினர் உறுப்பினரான அமரதாஸ ஆனந்த வெற்றி பெற்ற நிலையில் தவிசாளராக  பிரகடனம் செய்வதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.மணிவண்ணன் அறிவித்தார்.

இந்த சபை அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு  உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சுயேட்சை குழு முஸ்லீம் காங்கிரஸ்  உறுப்பினர்களும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி    உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

புதிய தவிசாளர்   அமரதாஸ ஆனந்த  கருத்து தெரிவிக்கையில்

சிறி லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பதில் தவிசாளர் ஏ.கே. அப்துல் சமட் அ.சுபைதீன்  ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் சோ.கிருபைமலர்  சுயேட்சை உறுப்பினர்களான  தி. யோகநாயகன்  இ. யோகேஸ்வரி விசேடமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர்   மு.இ.மு.ஜகான் என்பவர் எம்முடன்  இணைந்ததால் ஆட்சியை கைப்பற்ற முடிந்தது.

இந்த நாவிதன்வெளி பிரதேசத்தில் முஸ்லிம் மக்களோடு இணைந்து பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவினை வழங்கி அபிவிருத்தியை மேற்கொள்ள போவதாக சுட்டி காட்டினார்.

அதேவேளை  புதிய தவிசாளரரை  தெரிவு செய்ய வாக்களிப்பு ஆரம்பமாவதற்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் இணைப்பு செயலாளர் வருகை தந்ததுடன் சில உறுப்பினர்களை அழைத்து சென்று கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார்.

மேலும் புதிய தவிசாளர்   தெரிவை முன்னிட்டு சபை அமர்வு இடம்பெற்ற  நாவிதன்வெளி பிரதேச   மண்டப பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.