ஆளும் கட்சியை சரமாரியாக விமர்சித்து சபையில் ஆக்ரோசமாகப் பேசினார் அநுர – நாடாளுமன்றத்தில் பல குற்றவாளிகள் என்றும் போட்டுத் தாக்கினார்.

ஆளும் கட்சி உறுப்பினர்களின் கடந்த காலச் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தும், குற்றம் சுமத்தியும் சபையில் பேசிய ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தமக்கு ஒரு தடவையேனும் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் நாடாளுமன்றத்திலுள்ள பல குற்றவாளிகளுக்கு என்ன நடக்கும் என்பதைக் காட்டுவேன் என்றும் கூறினார்.

நாடாளுமன்றதில் நேற்று மத்திய வங்கி நிதி ஒதுக்கீடு மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தால் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. உரையாற்றிக்கொண்டிருந்த நேரத்தில் குறுக்கிட்ட அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஜே.வி.பி. உறுப்பினர்களைக் கடுமையாக விமர்சித்து, முன்னைய ஆட்சியில் செய்தது என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் வழங்கிய அநுரகுமார எம்.பி.,

“ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் எனக்கு இருக்குமென்றால், குற்றவாளிகளைத் தண்டிக்கும் அதிகாரம் எனக்கு இருக்குமென்றால் இந்த நாடாளுமன்றத்தில் பலர் இருக்க மாட்டார்கள்.

அவ்வாறு எனக்கொரு பலம் இருக்குமென்றால் இந்தச் சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்றத்தில் எனக்கு எதிராக எழுந்து பேச ஒருவரும் இருந்திருக்கமாட்டார்கள்.

ஜோன்ஸ்டன் போன்றவர்கள் இன்று இந்தச் சபையில் எனக்கெதிராகப் பேசக்கூட வந்திருக்கமாட்டார். ஆனால், அவ்வாறான ஒரு பலம் எனக்கு இல்லாது போயுள்ளதை நினைத்து வருத்தப்படுகின்றேன்.

உங்களுடன் இணைந்து ஆட்சி செய்துள்ளேன். நான் குற்றவாளி என்றால் இப்போதும் உங்களின் ஆட்சிதான் உள்ளது. இதற்கு முன்னர் நீண்ட காலமாகவும் உங்களின் ஆட்சிதான் இருந்தது. இந்தக் காலத்தில் நன்றாக விசாரணை நடத்தி எனக்குத் தண்டனை பெற்றுக்கொடுத்திருக்க முடியும். முடிந்தால் இப்போதாவது என்னைத் தண்டித்துக் காட்டுங்கள் பார்க்கலாம்.

ஆனால், எமக்கு ஒரு தடவை ஆட்சி அதிகாராம் கைக்குக் கிடைத்தால் இந்த நாடாளுமன்றத்தில் உள்ள பல குற்றவாளிகளுக்கு என்ன நடக்கும் என்பதைக் காட்டுவேன். ஒரு ஊழல்வாதியும், குற்றவாளியும் இந்த இடத்தில் இருக்கமாட்டார்கள்.

மத்திய வங்கி ஊழல்வாதிகள், மக்கள் பணத்தில் ஊழல் செய்தவர்கள், காணிக் கொள்ளையர்கள் என எவரும் இருக்க மாட்டார்கள். வெள்ளை ஆடையை அணிந்துகொண்டதனால் இவர்கள் தூய்மையானவர்கள் என ஆகிவிடாது.

ஆடை மட்டுமே தூய்மையாக வெள்ளையாக உள்ளது. ஆனால், அனைவரும் ஊழல்வாதிகள். இந்தச் சபையில் எனக்கு எதிராக எழுந்து குரல் எழுப்பும் நபர்களின் பின்புலம் எனக்கு நன்றாகத் தெரியும். ஒன்றன்பின் ஒன்றாக இவர்களின் உண்மையான முகத்தை வெளிப்படுத்த முடியும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.