குருந்தூர்மலையில் காவலரண் அமைக்க நீதிமன்று இணக்கம்; மதக்கட்டுமானங்கள் செய்யமுடியாது.

முல்லைத்தீவு – தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையில், காவலரண் அமைப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று இணக்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை அப் பகுதியில் இன முறுகலை ஏற்படுத்துகின்றவகையில், மதங்களுடன் தொடர்புடைய கட்டுமானங்களை மேற்கொள்ளமுடியாதெனவும் மன்று உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறிப்பாக ஏற்கனவே முல்லைத்தீவு – குருந்தூர் மலைதொடர்பாக இடம்பெற்ற வளக்கில், வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளையின் மூலம் குருந்தூர் மலைப் பகுதியில் கட்டடங்கள் எவையும் இரு தரப்பினராலும் அமைக்க முடியாதென உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும் அண்மை நாட்களாக குருந்தூர் மலைப் பகுதியில் கட்டுமான வேலை ஒன்றினை முன்னெடுப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் முனைப்புக்காட்டி வந்திருந்தது.

இதை அறிந்த கோவில் நிர்வாகத்தினர் 09.09.2020 நேற்றையநாள் முல்லைத்தீவு நீதிமன்றினை நாடியதுடன், நகர்த்தல் பத்திரம் (மோசன்) தாக்கல் செய்து, முன்னைய வளக்கின் மூலம், தற்போது மேற்கொள்ளவுள்ள கட்டுமானம் தொடர்பில் விசாரணைசெய்யுமாறு மன்றினை கேரியிருந்தனர்.

அதன் அடிப்படையில் இந்த வளக்கினை ஆராய்ந்த நீதிமன்று தொல்பொருள் திணைக்கள அதிகாரிக்கு அழைப்பாணை உத்தரவினைப் பிறப்பித்ததுடன், 10.09.2020 இன்றைய நாளுக்கு வளக்கு விசாரணைக்கான திகதியிடப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்றையநாள் கோவில் நிர்வாகத்தினர், முன்னாள் வடமாகாணசபைஉறுப்பினர் துரைராசா ரவிகரன், தொல்பொருள் திணைக்களத்தினர், போலீசார் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்த நிலையில் இவ் வளக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

குறிப்பாக வளக்குவிசாரணையின்போது, காவலரண் அமைப்பதற்கான கட்டுமானங்களே தாம் மேற்கொள்ளவுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தினரால் தெரிவிக்கப்பட்டதுடன், அவ்வாறு குருந்தூர் மலைப் பகுதியில் காவலரண் அமைப்பதற்கு மாவட்டசெயலகம், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம் என்பன தொல்பொருள் திணைக்களத்திற்கு வளங்கிய அனுமதிப் பத்திரங்களை அவர்கள் மன்றிற்கு சமர்ப்பித்தனர்.

மேலும் கோவில் நிர்வாகத்தினர்சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளுள் ஒருவரான கனகரத்தினம் சுகாஷ் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்றையநாள் போலீசார் மற்றும், தொல்பொருள் திணைக்களத்தினர் எதிர்த்தரப்பினர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

தம்மால் விகாரைகள் எதுவும் கட்டப்படவில்லை எனவும், காவலரண்தான் தம்மால் அமைக்கப்படவுள்ளதாக அவர்களால் மன்றில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இந்த வளக்கு விசாரணைகளின் அடிப்படையில், இரு தரப்பினரும் இணங்கியதுபோன்று, இரு தரப்பினரும் மதத்தோடு தொடர்புடைய எவ்வித கட்டுமானங்களையும் அங்கு மேற்கொள்ளப்போவதில்லை என்ற இணக்கத்தினை தொடர்வதெனவும்

தொல்பொருள் திணைக்களம் அப் பகுதியில் எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதென, ஒவ்வொருமுறையும் அதுதொடர்பான அறிக்கைகளை மற்றுக்கு சமர்ப்பிக்கவேண்டும் எனவும் இணக்கமான முடிவொன்று எடுக்கப்பட்டுள்ளது – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.