உலக சவால்களை எதிர்நோக்கும் துனிச்சல் மிக்க சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : முதல்வர் சரவணபவன் வேண்டுகோள்!!!

தற்கொலை சிந்தனைகள், போதைப்பொருள் உள்ளிட்ட பாவனைகளை எதிர்கால சந்ததியினரிடமிருந்து களைந்து அவர்களை உலக சவால்களை எதிர்நோக்கும் துனிச்சல் மிக்கவர்களாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெற்காசியாவிலேயே முதல் முறையாக மட்டக்களப்பு மாநகரம் சிறுவர் சிநேக மாநகரமாக மாற்றியமைக்கப்படவுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டிம் சுட்டான் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) நிதி உதவியில் செரி (CERI)  நிறுவனத்தின் பங்களிப்புடன் மட்டக்களப்பு மாநகர சபையினை சிறுவர் சிநேகமிக்க மாநகர சபையாக மாற்றுவதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உலகில் தென்கொரியாவில் சீயோல் நகரில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு அது வெற்றியடைந்துள்ள நிலையில் தெற்காசியாவில் முதல் சிறுவர்நேய நகராக இலங்கையின் மட்டக்களப்பு மாநகர சபையை தெரிவு செய்து கட்டமைப்பு ரீதியான  வேலைத் திட்டங்களை  ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டிம் சுட்டான் இதன் பொது கருத்து தெரிவித்தார்.

அத்துடன் சிறுவர் சிநேக மாநகரை உருவாக்கும் தமது கனவினை நிறைவேற்ற யுனிசெப் நிறுவனமானது முன் வந்தமையையிட்டு தாம் மனம் நெகிழ்வதாகவும், இதனை மட்டக்களப்பு மாநகருக்கு மட்டுமான திட்டமாக அல்லாது மட்டக்களப்பு மாவட்ட மக்களும் பயனடையும் வகையில் சிறுவர்களின் உரிமைகளையும், அவர்களின் பங்களிப்புகளையும் முன் நிறுத்தி இத்திட்டத்தினை அமுல்படுத்தவுள்ளதாகவும் மாநகர முதல்வர்  தெரிவித்தார்.

குறிப்பாக பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்படும் இடைவெளியினை வெகுவாகக் குறைப்பதன் மூலம் பெற்றோர் அதிக நேரத்தினை தமது பிள்ளைகளுடன் போக்குவதற்கான செயற்பாடுகளையும் மேற்கொள்ளத் தயாராகவுள்ளதாவும், இதற்கான முதற்படியாக மாநகர பாலர் பாடசாலைகள், சிறுவர் பூங்காக்கள் போன்றவற்றினை மாற்றியமைப்பதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி தற்கொலை சிந்தனைகள், போதைப்பொருள் உள்ளிட்ட பாவனைகளை எதிர்கால சந்ததியினரிடமிருந்து களைந்து அவர்களை உலக சவால்களை எதிர்நோக்கும் துனிச்சல் மிக்கவர்களாக உருவாக்க தான் விரும்புவதாகவும், இனிவரும் கலங்களில் சிறுவர்கள் தனியாக எமது மாநகருக்குள் நடமாடுவதற்கும், பெரியவர்களைப் போல் அவர்களும் தமது தேவைகளை நேரடியாக மாநகர சபை உள்ளிட்ட திணைக்களங்களை அனுகி பெற்றுக் கொள்வதற்குமான செயற்பாடுகளை மேற்கொள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன், மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் சிரேஸ்ட திட்ட வரைஞர் லூயிஸ் மொரீரா டானியல், கல்விசார் செயற்பாட்டாளர்  ஜாஸ்மின், யுனிசெப் நிறுவனத்தின் பிரதம வெளிக்கள அலுவலர் றிபென்சியா, செரி நிறுவனத்தின் தேசிய திட்ட பணிப்பாளர் வி.தர்சன் உட்பட மாநகர சபையோடு இணைந்து செயற்படும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதானிகள், மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.