தந்தையின் உடலை பல்கலைக்கழகத்துக்கு வழங்கிய பிள்ளைகள்!

தனது இறப்புக்கு பின்னர் உடலை யாழ்,மருத்துவ பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு உதவும் முகமாக மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் எனும், தந்தையின் விருப்பத்துக்கு அமைய அவர் உயிரிந்த நிலையில் அவரது உடலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு பிள்ளைகள் ஒப்படைத்தனர்.

பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்தையா சிவானந்தவேல் (வயது-73) என்ற முதியவரின் சடலமே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கப்பட்டது.

முதியவர் தான் இறந்த பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக தனது உடலை வழங்குமாறு மனைவி மற்றும் பிள்ளைகளிடம் உயிருடன் இருக்கும் போது விருப்பம் தெரிவித்திருந்தார்.

அவர் நேற்று (10) காலமானார். அவரது உடல் தெல்லிப்பழை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்ட நிலையில் பலாலி பொலிஸார் ஊடாக மனைவி மற்றும் பிள்ளைகள் தமது விண்ணப்பத்தை மல்லாகம் நீதிமன்றில் முன்வைத்தனர்.

அவர்களது விண்ணப்பத்தை ஆராய்ந்த மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா, உயிரிழந்தவரின் உடலை மனைவி மற்றும் பிள்ளைகளின் ஒப்புதலுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒப்படைக்க அனுமதியளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.