தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தல் – தரணியெங்கும் உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பம்.

அமைதிப் படையாகத் தாயக மண்ணில் காலடி எடுத்து வைத்து ஆக்கிரமிப்புப் படையாக ஈழத் தமிழர்களை வேரறுக்கும் படையாக மாறி, வயது, பால் வேறுபாடின்றி தேசத்து உறவுகளை வேட்டையாடி – சூறையாடி அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அஹிம்சை வழியில், நீராகாரமும் இல்லாது 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 33ஆவது நினைவேந்தல் இன்று தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகின்றது.

மக்கள் மத்தியில் விடுதலைத் தீயை விதைத்த திலீபன், உண்ணாவிரதப் போராட்டத்தை 1987ஆம் ஆண்டு ஆரம்பித்தார். ஈழத் தமிழரின் தாயக தேசம் எங்கும் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவம் மற்றும் இலங்கை அரசுக்கு எதிராக 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அஹிம்சைத் தீயை நல்லூரில் திலீபன் பற்ற வைத்தார். 12 நாட்கள் நீராகாரமும் இன்றி உண்ணாவிரதத்தை முன்னெடுத்த தியாக தீபம் திலீபன், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

அஹிம்சையைப் போதித்த காந்திய தேசம் என்று சொல்லப்பட்ட இந்தியா, தியாக தீபம் திலீபனின் அஹிம்சைப் போராட்டத்தின் முன் தோற்றுப் போனது; திலீபனின் சாவை வேடிக்கை பார்த்தது. இதுவே பின்னாளில் விடுதலைப்புலிகள் இந்தியாவை ஈழமண்ணிலிருந்து அடித்து – விரட்டி துரத்தும் அளவுக்கு மாற்றம் கண்டது.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!’ என்று முழக்கமிட்டு தாயக மண்ணை முத்தமிட்டு வீரகாவியம் படைத்த தியாக தீபம் திலீபனின் நினைவு நாள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைப் பிரதேசங்களில் மிக உணர்வெழுச்சியுடன் கடந்த காலங்களில் நினைவுகூரப்பட்டது. சிவப்பு – மஞ்சள் கொடிகளால் தமிழர் தாயக மண் அலங்கரிக்கப்பட்டு, முக்கிய சந்திகளில் திலீபனின் உருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

தாயக தேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர், பகிரங்கமாக – பொதுவெளியில் நினைவுநாள் நினைவுகூரப்படவில்லை. புலம்பெயர் தேசங்களில் மாத்திரம் பேரெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டு வந்தது.

கடந்த 2016ஆம் ஆண்டு, நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் – 10ஆண்டுகளின் பின்னர் பகிரங்கமாக நினைவுநாள் நிகழ்வுகள் முதன்முறையாக நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் திலீபனின் நினைவுத் தூபியில் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், இம்முறை பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி உள்ளிட்ட தமிழர் தாயகத்தின் முக்கிய இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. ஆனால், தடைகளைத் தகர்த்தெறிந்து உணர்வெழுச்சியுடன் நினைவேந்தலை நடத்துவோம் என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.