விக்கிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 2 தரப்பு இணைக்கப்பாட்டுடன் முடிவுக்கு வந்தது. (photo)

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று நண்பகல் 1.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளேயே சமரசமாகத் தீர்த்துவைக்கப்பட்டதால், வழக்கு முடிவுக்கு வந்தது.

இன்று டெனீஸ்வரன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

விக்னேஸ்வரன் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதால் தாங்களும் அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய இரு தரப்பினரினதும் இணக்கப்பாட்டுடன் விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லாது இத்தோடு முடித்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களினால் அறிவிக்கப்பட்டது.

சட்டத்தரணியான டெனீஸ்வரன் வடக்கு மாகாண சபை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என்றும், அவரை மீள அமைச்சராக உள்வாங்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் 29.06.2018 அன்று இடைக்காலக்  கட்டளையைப் பிறப்பித்திருந்தது.

எவ்வாறாயினும் நீதிமன்றம் வழங்கிய இடைக்காலக் கட்டளையைச் செயற்படுத்தத் தவறிவிட்டார் எனக் கூறி, டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை விக்னேஸ்வரனுக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்தார்.

இதேவேளை, பிரதான வழக்கில் டெனீஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் 05.08.2019 அன்று தீர்ப்பளித்திருந்தது.

இவ்வாறான நிலைமையில் டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நேற்று குறித்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதற்காக விக்னேஸ்வரன் நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும், தாம் வழக்குக்காகச் செலவழித்த தொகையைச் செலுத்த வேண்டும், பிரதான வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற வேண்டும் ஆகிய 3 நிபந்தனைகளை டெனீஸ்வரன் தரப்பினர் விதித்திருந்தனர்.

எவ்வாறாயினும் அவற்றில் முதல் இரண்டு நிபந்தனைகளையும் ஏற்க விக்னேஸ்வரன் தரப்பினர் மறுத்தமையால் வழக்கு விசாரணையைத் தொடர நீதிமன்றம் முடிவு செய்திருந்தது.

இதற்கமைய இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட முன்னர் இரு தரப்பும் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய வழக்கை வாபஸ் பெறுவதாக டெனீஸ்வரன் தரப்பு நீதிமன்றத்துக்கு அறிவித்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.