’20’ திருத்த வரைவுக்கு எதிராக எவரும் நீதிமன்றம் செல்லலாம் – அமைச்சர் நாமல் வெளிப்படைப் பேச்சு!!!

“அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நாட்டு மக்கள் எவரும் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தலாம். ஓர் இனத்தை இலக்காகக் கொண்டு 20ஆவது திருத்தம் கொண்டுவரப்படவில்லை. பல்லின மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் கருத்தில்கொண்டு புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்.”

– இவ்வாறு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 19ஆவது திருத்தம் நாட்டுக்காக உருவாக்கப்பட்டதல்ல. நல்லாட்சி அரசின் தேவைக்காக அவசர அவசரமாக இயற்றப்பட்டது. இதன் பயனை மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை. முரண்பாடுகள் மாத்திரமே தோற்றம் பெற்றன.

நாட்டுக்குப் பொருந்தும் வகையில் அரசமைப்பு திருத்தம் செய்யப்படும் எனவும், அதன்பின்னர் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் எனவும் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம்.

வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு உண்டு. இதன் காரணமாகவே அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்பட்டு 20ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூல வரைவு தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 20ஆவது திருத்தச் சட்ட வரைவை யார் தயாரித்தது என்பது தொடர்பில் ஆராய்வதற்கான அவசியம் ஏதும் கிடையாது. நாட்டு மக்கள் எவரும் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.