புரவி சூறாவளி: 6 மாவட்டங்களைச் சேர்ந்த 12,252 பேர் பாதிப்பு

புரவி சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் இதுவரை 6 மாவட்டங்களைச் சேர்ந்த 12,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 2,911 குடும்பங்களைச் சேர்ந்த, 10,336 பேர் 79 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வரை மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை ஆகிய 6 மாவட்டங்கள் இவ்வனர்த்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களே அதிக பாதிப்புக்களை சந்தித்துள்ளன.

 

அத்துடன் 15 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளதோடு, யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே குறித்த வீடுகள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 152 வீடுகள் உள்ளிட்ட 192 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது.

9 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இதனால் சேதமடைந்துள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலகங்கள் ஊடாக உரிய நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.