மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் வாய்த்தர்க்கம்……………….

மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் பொலிஸார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை கைது செய்து கொண்டு செல்ல பொலிஸார் முயற்சி செய்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்று மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நடாத்தப்பட இருந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் பொலிஸாரும் புலனாய்வுத்துறையும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த தாய்மாரை 14 நாள் தனிமைப்படுத்துவோம் என அச்சுறுத்தி அவர்களை பொலிஸார் கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

இன்று காலை 8.30 மணியளவில் மாவட்டம் முழுவதும் இருந்து மட்டக்களப்பு நகருக்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை தடுத்து நிறுத்தி களைந்து செல்லுமாறு பொலிஸாரும் பொதுச் சுகாதார பரிசோதகரும் எச்சரிக்கை செய்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியது.

அனுமதி எடுக்காது ஆர்ப்பாட்டம் நடத்தினால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவீர்கள் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அச்சுறுத்திய போது அதில் இருந்த ஒரு பெண்மணி “நீங்கள் கைது செய்தாலும் பரவாயில்லை நாங்கள் ஆர்ப்பாட்டத்தை நடாத்துவோம். அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா நீங்கள் என்னவேண்டும் என்றாலும் செய்யுங்கள்” எனகூறியதால் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் அனுமதி பெற்றே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும், இல்லையென்றால் 14 நாட்கள் அனைவரையும் தனிமைப்படுத்துவோம் என அச்சுறுத்திய நிலையில் காணாமல் போன உறவினர்களுக்கும், பொலிஸார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, ஆர்ப்பாட்டகாரர்கள் அந்த இடத்திலிருந்து களைந்து சென்று தந்தை செல்வா பூங்காவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.