குச்சவெளி பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் விளக்கமறியல்…

(பதுர்தீன் சியானா)
திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடலிக்குளம்  காட்டு பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் ரந்திக்க லக்மால் ஜெயலத் இன்று (14) உத்தரவிட்டுள்ளார்.
குச்சவெளி வடலிக்குளம் பகுதியில் நேற்று 13ம் திகதி மாலை புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தும் சில பொருட்களுடன் குறித்த ஆறு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் குருநாகல், மாத்தறை, மற்றும் குச்சவெளி,கலேவல  பகுதிகளைச் சேர்ந்த 26, 27, 45,52 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குச்சவெளி வடலிக்குளம் காட்டுப்பகுதியில் இனந்தெரியாதோர் காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிசார் அவர்களை கைது செய்ததாகவும் அவர்களிடமிருந்து சில பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 6 பேரில் ஒருவர் தொல்பொருள் திணைக்களத்தின் கடமையாற்றி வருபவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றில்  ஆஜர்படுத்திய போதே எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.