யாழ்.பல்கலைக்கழக 6 ஆவது முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 6 ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 29, 30 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இதனையொட்டி, நிகழ்வை அறிமுகம் செய்யும் வகையிலான ஊடக சந்திப்பு இன்று நண்பகல் யாழ். பல்கலைக் கழக சபா மண்டபத்தில், முகாமைத்துவ கற்கைள் மற்றும் வணிக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பீடத்தின் 6 ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாட்டுக்கான இணையத் தளத்தைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா சம்பிரதாய பூர்வமாக இயக்கி ஆரம்பித்து வைத்தார்.

இந்தச் சந்திப்பின் போது, ஆய்வு மாநாடு குறித்து வழங்கப்பட்ட விபரம் வருமாறு,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடமானது 6வது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாட்டினை நிலைபேறான அபிவிருத்திக்கான பிரச்சினைகள் மற்றும் சவால்கள் ,பொருளாதார தீர்வுகளுக்கு ஊக்கமளித்தல் என்ற ஆய்வுக் கருப்பொருளில் 2021ஆம் ஆண்டு சித்திரை மாதம் 29ம் மற்றும் 30ம் திகதிகளில் நடாத்த தீர்மானித்திருக்கின்றது.

எதிர்கால சந்ததியினருக்கான வளமான எதிர்காலத்தினை உருவாக்குவதுடன் நெருக்கடிகளினைத் தவிர்த்து வாய்ப்புக்களையும் அவர்களின் எதிர்பார்ப்புக்களினையும் நிவர்த்தி செய்யக்கூடியவாறான நிலைபேறான அபிவிருத்தியினை உருவாக்குவது தற்காலத்தில் மிக முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றது.

நிலைபேறான அபிவிருத்தியானது பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழலினை ஒன்றிணைப்பதாகக் காணப்படுகின்றது. நாம் எல்லோரும் பல்வேறுபட்ட எதிர்பாராத சவால்களும் இடர்களும் மிகுந்த சகாப்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். குறிப்பாக கொரோனா பேரிடர் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தில் பரந்த தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது.

 

இது தொடர்பில் வளர்ந்துவரும் நாடுகளுக்கிடையில் வேறுபாடுகள் அரிது. இவ் இடர் பல மில்லியன் வேலைவாய்ப்புகளினை ஆபத்து நிறைந்ததாக மாற்றியுள்ளது. அத்துடன் நாடுகளின் பொருளாதர , வறுமை மற்றும் நிறுவன அமைப்புக்ளின் முடக்க நிலை போன்றவற்றை தோற்றுவித்துள்ளது. இவை நிச்சயமற்ற எதிர்காலத்துக்கு வித்திட்டு வருகின்றது.

 

குறிப்பாக மனிதவளம், நிதி, வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்தல் சார் சவால்களை தீர்க்கக்கூடிய பொறிமுறைகளை நிறுவுவதுடன் நிலைபேறான அபிவிருத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிகோலும் முகமாக இவ் ஆய்வுகள் அமையப்பெறுகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.