கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் தவத்துக்கு எதிராக அரசியல் விமர்சகர் இப்ராஹிம் குற்றச்சாட்டு!

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ. எல். தவத்துக்கு எதிராக சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவையின் தலைவரும், அரசியல் விமர்சகருமான வர்த்தகர் முனைமருதவன் எம். எச். எம். இப்ராஹிம்  கல்முனை பொலிஸ் நிலையத்தில் குற்றவியல் முறைப்பாடு மேற்கொண்டு உள்ளார்.

அமெரிக்க தூதரக அதிகாரியுடன் இப்ராஹிம் எடுத்த புகைப்படத்தை உரு மாற்றம் செய்து தவத்தின் முகநூல் கணக்கில் பதிவு வெளியானது.

தவத்தின் இப்பதிவு காரணமாக அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக பொலிஸ் முறைப்பாட்டில் இப்ராஹிம் குறிப்பிட்டு உள்ளார்.

இந்நிலையில் இப்ராஹிம் இன்று  (02)சனிக்கிழமை அம்பாறை ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து இது தொடர்பாக பேசியபோது தெரிவித்தவை வருமாறு

தவத்தை படித்தவர், பண்பானவர், நாகரிகம் உடையவர் என்று மக்கள் நம்புகின்றார்கள். இவர் மக்கள் பிரதிநிதியாகவும் இருந்தவர். இவ்வாறான ஒருவர் சொந்த முகநூலில் நான் சம்பந்தப்பட்ட புகைப்படத்தை உரு மாற்றம் செய்து பதிவு வெளியிட்டு உள்ளார்.

அண்மையில் கொழும்பில்  நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் நபர் ஒருவருடன் நான் நிற்பதாக தவம் புகைப்படத்தை உரு மாற்றம் செய்து இருக்கின்றார். ஆயினும் இதை அசல் புகைப்படம் என்றே பார்ப்பவர்கள் நம்புவதாக உள்ளது.

ஏனென்றால் நம்பகரமான வட்டாரமாக தவத்தின் முகநூல் கணக்கு இவர்களால் விசுவாசிக்கப்படுகின்றது. வேறு ஒரு பேர்வழி இதை வெளியிட்டு இருந்தால் யாரும் இதை பெரிதாக எடுத்திருக்க மாட்டார்கள். நானும் இதை பெரிதாக எடுத்திருக்க மாட்டேன்.

இப்புகைப்பட பதிவு பாரிய பரபரப்பை முகநூல் உலகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஏற்படுத்தி இருக்கின்றது. இஸ்லாமிய உணர்வாளர்களை கொதிப்படைய வைத்து உள்ளது. இவர்கள் மேற்சொன்ன பதிவுக்கு வெளியிட்டு உள்ள கருத்து பரிமாற்றங்கள் என்னை சுட்டெரிப்பவையாக உள்ளன.

இதனால் எனக்கும், எனது குடும்பத்துக்கும் பாரிய அச்சுறுத்தல்களையும், அபகீர்த்தியை ஏற்படுத்தி உள்ளது. என் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக குற்ற மனத்துடன் இக்காரியத்தை இவர் செய்து இருக்கின்றார்.

பொலிஸார் இவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகின்றேன். இது இவருக்கும் இவரை போன்றவர்களுக்கும் மிக சரியான பாடமாக இருக்கும். அத்துடன் என் மீது ஏற்படுத்தப்பட்டு இருக்கின்ற களங்கத்தை துடைப்பதுடன் நான் குற்றம் அற்றவன் என்பதை அனைவரும் அறிந்து கொள்வதற்கு வழி அமைத்து கொடுக்கும் என குறிப்பிட்டார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.